பூங்காவனத்தின் சந்தாதாரராக இணைந்து கொள்ளுங்கள்

Friday, March 8, 2024

59. எழுத்தாளர் கீதா கணேஷ் அவர்களுடனான நேர்காணல்

தேசிய கல்வி நிறுவகத்தின் தமிழ் மொழித் துறை விரிவுரையாளரும் எழுத்தாளருமான கீதா கணேஷ் அவர்களுடனான நேர்காணல்


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


முதலில் உங்களைப் பற்றியும் உங்கள் ஊர், பாடசாலை மற்றும் பல்கலைக்கழக வாழ்வு பற்றியும் குறிப்பிடுங்கள்?

கீதா கணேஷ் என்ற பெயரில் எழுதிவரும் நான், ஈழத்தின் வடக்கே அமைந்த தீவுப் பிரதேசமாகிய வேலணை மேற்கு சிற்பனை எனும் கிராமத்தில் பிறந்தேன். 1991 ஆம் ஆண்டு இடப்பெயர்வில் அங்கிருந்து புறப்பட்டு நாங்கள் பல்வேறு இடங்களில் வசித்து வந்தோம். எங்கள் குடும்பத்தில் மூன்று சகோதரிகளும் சகோதரனுமாக நாங்கள் ஐந்து பிள்ளைகள். தங்கை முகாமைத்துவப் பட்டதாரி, சகோதரர் பொறியியலாளர். எனது கணவர் திரு. கவாஸ்கர் கணக்காளராகப் பணிபுரிகின்றார். லோககீதா கணேசலிங்கம் எனது இயற்பெயராயினும் கீதா கணேஷ் என்ற பெயரிலேயே நான் திருமணத்தின் பின்னும் சிறுகதைகளை எழுதி வருகிறேன்.

நாங்கள் பாடசாலைக் காலத்திலேயே பல்வேறு இடப்பெயர்வுகளைச் சந்தித்து, பின்னர் வவுனியாவில் எமது பாடசாலைக் கல்வியைத் தொடர்ச்சியாக முன்னெடுக்கக் கூடியதாக இருந்தது. அதுவரை பல்வகைச் சூழலுக்குள் வாழவேண்டியிருந்தோம். வவுனியா வெளிக்குளம் கனிஷ்ட உயர்தர வித்தியாலயத்தில் சாதாரண தரம் வரையான கல்வியையும் உயர்தரக் கல்வியை வவுனியா சைவப் பிரகாச மகளிர் கல்லூரியிலும் கற்றேன். தொடர்ந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவானேன். 

பாடசாலைக் கல்வி எனது இணை பாடவிதான செயற்பாடுகளுக்கு பல்வேறு வகையிலும் அடித்தளமிட்டது. அந்த அடித்தளம் பல்கலைக்கழக வாழ்விலும் தொடர்ந்தது. அதனாலேயே யாழ். பல்கலைக்கழகத்தில் தமிழைச் சிறப்புப் பாடமாகப் பயின்றேன். பல்கலைக்கழகக் கல்வி பல்வேறு மாணவர்களுடன் பழகுவதற்கான சூழலையும் பல்வேறு அனுபவங்களையும் பெற்றுத் தந்தது. பல்கலைக்கழக கல்வியின் பின்னர் வீரகேசரிப் தலைமைப் பத்திரிகைக் காரியாலயத்தில் உதவி ஆசிரியராகப் பணிபுரிவதற்கான நேர்முகப் பரீட்சையில் தெரிவுசெய்யப்பட்டு அங்கு பணிபுரிந்தேன். இங்கு பணிபுரிந்துகொண்டிருந்த சிறிது காலத்தில் இலங்கை ஆசிரியர் சேவைக்கு விண்ணப்பித்து ஆசிரியராகப் பணிபுரிந்தேன். பாணந்துறை அல் பஹ்றியா முஸ்லிம் வித்தியாலயத்திலேயே எனக்கு முதல் நியமனம் கிடைத்தது. பின்னர் அங்கிருந்து பாணந்துறை ஜீலான் மத்திய கல்லூரிக்கு மாற்றலாகி கடமையாற்றினேன். அதன் பின்னர் 2017 இலிருந்து இலங்கைத் தேசிய கல்வி நிறுவகத்தின் தமிழ் மொழித் துறையில் விரிவுரையாளராகப் பதவியேற்று தற்போது வரை அங்கு கடமையாற்றி வருகிறேன்.


இலக்கியத் துறையில் ஆர்வம் ஏற்படக் காரணமாயமைந்த சூழலைக் குறிப்பிட முடியுமா?

இலக்கியத்துறை ஈடுபாட்டிற்குக் காரணமாக வாசிப்பு அனுபவம், கேட்டல் மற்றும் அதனூடான தேடலும் பிரதான காரணங்களாக அமைந்தன. பாடசாலைக் காலத்திலிருந்தே வகுப்பறைச் சூழல் வாசிப்பிற்கான களமாக அமைந்தது. இலக்கியத் தேடலை ஆர்வப்படுத்தும் வகையிலான நூல்கள், பத்திரிகைகள் வாசிப்பதற்கான ஊடகங்கங்களாக அமைந்தன. தனியே சுயதேடல் மூலமான வாசிப்பு என்பதற்கப்பால் சில விடயங்களை செவிமடுத்தலின் ஊடாக நாங்கள் வாசித்த அந்த இலக்கியச் சுவையை அனுபவிக்க வேண்டும் என்ற உந்துதல் இலக்கியத்தின் மீதான நாட்டத்திற்கு முக்கிய காரணமாக அமைந்தது. 

குறிப்பாக எங்களுடைய அம்மா பல வகையான விடயங்களை வாசித்து அவற்றை எங்களோடு பகிர்ந்துகொள்வார். ஆன்மிகக் கருத்துக்களாயினும் சரி, இலக்கியக் கருத்துக்களாயினும் சரி தான் வாசித்தவற்றை எங்களோடு பகிர்ந்து கொள்ளும் போது அந்தவிடயத் தொற்றுதலுக்கப்பால் ஒரு தேடல், நானும் வாசித்து அறிய வேண்டும், பல விடயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற தாகத்தை என்னுள் ஏற்படுத்தியது. அம்மா தான் வாசித்து அறிந்த விடயங்களை மிகச் சாதாரணமாகத்தான் எங்களுக்குக் கூறுவார். இதை நாங்கள் படிக்க வேண்டும் என்ற எந்தவிதமான திணிப்பும் அங்கு இருக்காது. பாடசாலையில் சென்றுதான் எல்லா விடயங்களையும் கற்க வேண்டும் என்ற எண்ணப்பாடுகளுக்கு அப்பால் அம்மாவின் வாசிப்புப் பகிர்வுதான் எனக்குள் தேடலை ஆரம்பித்தது. 

உதாரணமாக நான் சிறுமியாக இருந்த போது அம்மா, அபிராமிப்பட்டரின் அபிராமி அந்தாதி படித்துக் கொண்டிருப்பார். அப்போது அந்தாதி என்ற இலக்கிய வடிவம் பற்றி அம்மா கூறி அந்த பதிகங்களைப் பாடுவார். அதன்பின் நான் பாடசாலையில் உயர்தரத்தில் இலக்கியம் கற்கும் போது அந்தாதி இலக்கிய வடிவம் பற்றி அம்மா கூறிய விளக்கமும் அபிராமிப்பபட்டரின்  பதிக விளக்கமும் எனக்கு அப்படியே பதிந்துகொண்டன. இன்றுரை நான் வியந்து கொள்ளும் விடயம் இதுதான். அம்மா மிகச் சாதாரணமாக எங்களுக்குள் ஏற்படுத்திய வாசிப்பும் தேடலும் பற்றித்தான். அம்மா சமையல் செய்துகொண்டோ இன்னொரு வேலையில் ஈடுபட்டுக்கொண்டோ சாதாரணமாகக் கூறுவார். அப்பா வாசிப்பதற்கேற்ற பழைய நூல்கள், பத்திரிகைகள் கிடைக்கும் போதெல்லாம் வீட்டிற்குக் கொண்டு வருவார். இன்னொன்று அவரது உரத்து வாசித்தலாலும் பல விடயங்கள் உள்வாங்கப்படும். அவர்களிடம் சாதாரணமாகக் காணப்பட்ட விடயங்கள் எமது நாளாந்த வாழ்விலும் பதிந்துவிட்டன. இத்தகைய சூழல் என்னை அறியாமலேயே என்னுள் இலக்கிய நாட்டத்தையும் தொடர்ந்து எழுத்தார்வத்தையும் தூண்டியது எனலாம். வாசிப்பும் தேடலும் எப்போதும் வாழ்க்கையில் கைவிட முடியாத சொத்துக்கள். 


உங்களுக்கு மிகவும் பிடித்த சிறுகதையாசிரியர் யார்? என்ன காரணம்?

இவர்தான் என தனி ஒருவரைச் சுட்டிக்காட்ட முடியாது. பல எழுத்தாளர்களைப் பிடிக்கும். சமூகம் சார்ந்து சிந்தித்து சமூகத்தின் யதார்த்தத்தைப் பிரதிபலிக்கும் எழுத்தாளர்களின் படைப்புக்கள் எப்போதும் வாசகர் மனதிலிருந்து நீங்காதவை. அந்தவகையில் புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், வைத்தியலிங்கம், இலங்கையர் கோன், நந்தி, யோகேஸ்வரி சிவப்பிரகாசம், தட்சாயினி போன்றவர்களின் சிறுகதைகள் என்னை மிகவும் கவர்ந்தவை.


உங்களை நீங்கள் எப்போது ஒரு எழுத்தாளராக உணர்ந்தீர்கள்?

இப்போதுவரை நான் எழுதும் போது ஒரு எழுத்தாளர் என்ற நிலையை உணர்வதை விடவும் என் சமூகத்தை எழுத்துக்களின் ஊடாக வாசித்த வாசகர்கள் எனது படைப்புக்கள் பற்றிய கருத்துப் பகிர்வின் ஒவ்வொரு தருணங்களிலும் எழுத்தாளராக உணர்வதோடு மேலும் பட்டை தீட்டிக்கொள்ள வேண்டும் என்று உணர்வேன்.


சிறுகதைகள் மீதான ஆர்வம் எப்போது இருந்து ஆரம்பித்தது? உங்களது முதலாவது சிறுகதையை எழுதிய தருணம் எப்படியிருந்தது?

பாடசாலைக் காலத்தில் இணை பாடவிதான செயற்பாடுகளுக்காக அவ்வப்போது எழுதியிருக்கிறேன். உயர்தரத்தில் கல்வி கற்கும் போது தமிழ்மொழித் தினப் போட்டியில் சிறுகதை ஆக்கப் போட்டியில் பங்குபற்றி வெற்றி பெற்றிருக்கிறேன். அப்போதுதான் என்னுள் இருக்கும் திறமையை நான் உணரக்கூடியதாக இருந்தது. பின்னர் பல்கலைக்கழகக் காலத்தில் எழுதிய தொலைபேசி என்ற கதை ஜீவநதி சஞ்சிகையில் முதன் முதலில் பிரசுரமாகியபோது எனக்கு அது பெருமகிழ்வாகவும், என் எழுத்துக்களில் நான் வாழும் சமூகத்தைக் காணுவது வேறுபட்ட அனுபவமாகவும் உணர்ந்தேன். 


எழுத்துத் துறையில் பல்வேறு கூறுகள் இருக்கின்ற போதும் நீங்கள் சிறுகதை; துறையைத் தேர்ந்தெடுத்தமைக்கான விசேட காரணம் என்ன?

தமிழ் இலக்கியம் சார்ந்து கட்டுரைகளும் சில கவிதைகளும் எழுதியிருக்கிறேன். தான் சார்ந்த சமூகத்தைப் பிரதிபலித்துக் காட்டவேண்டிய மன உந்துதல் எனக்குள் எழுந்தபோது அதற்கு எழுத்து சிறந்த கருவியாக இருப்பதை நான் உணர்ந்துகொண்டேன். அந்த எழுத்துத் துறைக்குள் பல்வகைமையான வெளிப்பாட்டு ஊடகங்கள் இருந்தபோதிலும் சிறுகதையூடாக என் கருத்தை நிதர்சனமாக முன்வைப்பதற்கு ஏற்றதாக இருந்தது. விடயத்தை அலட்டல் இல்லாமல் இரசனை குன்றாது அதேநேரம் வாசகரின் நேரத்தை அதிகம் பிடித்துக் கொள்ளாமலும் வாசிப்பவர் மனதில் ஒரு நெருடல் ஒட்டிக்கொள்ளும் வகையிலும் இருப்பதற்கு சிறுகதை வடிவமே எனக்குப் பொருத்தமாகத் தெரிந்தது. ஆனால் சிறுகதைதான் தொடர்ந்து எழுதுவேன் என்றோ அதுமட்டுமே சிறந்த வடிவம் என்றோ கூறமுடியாது. காலம், வெளிப்படுத்தும் விடயத்தின் தேவைகளுக்கு ஏற்ப மாற்றமடையலாம்.


நீங்கள் வாசித்து இரசித்த முதலாவது சிறுகதை நூல் எது? உங்களுக்கு மிகவும் பிடித்த சிறுகதை நூல் எது?

முதலாவது சிறுகதை நூல் என்பதைவிட நாங்கள் உயர்தரத்தில் கல்வி கற்கும் போது இருந்த சிறுகதைகளைத்தான் நான் மிகவும் இரசித்துப் படித்திருக்கிறேன். புதுமைப்பித்தனின் ஒருநாள் கழிந்தது, இலங்கையர்கோனின் வெள்ளிப்பாதசரம், கனகாம்பரம், பாற்கஞ்சி, பகீரதப் பிரயத்தனம் போன்ற சிறுகதைகளை மீண்டும் வாசித்திருக்கிறேன். இக்கதைகள் எல்லாமே பரீட்சை நோக்கத்திற்கான கற்றலைத் தாண்டி இப்போதும் மனதில் பதிந்து இரசனைக்குரிய சிறுகதைகளாக இருக்கின்றன. இவற்றைவிட நந்தியின் சிங்களத்து மருத்துவிச்சி இன்றுவரை நான் சலிப்படையாமல் மீண்டும் மீண்டும் வாசிக்கும் ஒவ்வொரு தருணங்களிலும் புதிய படைப்பை வாசிப்பதான அனுபவத்தைப் பெற்றுக்கொள்கிறேன்.


இதுவரை வெளிவந்த உங்களது நூலாக்கங்கள் தொடர்பாகக் கூற விழைவது? 

படைப்பாக்கங்களை எழுதிய போதிலும் நூலுருப்பெற்றவை சிறுகதைகள் மட்டுமே. 2012 ஆம் ஆண்டில் எத்தனங்கள் சிறுகதைத் தொகுதியும், 2022 ஆம் ஆண்டில் இருளைக் கிழித்த கோடு என்ற சிறுகதைத் தொகுதியும் வெளிவந்திருக்கின்றன. இவற்றைவிட பாடசாலை மாணவர்களுக்கான நூல்கள் பலவும் எழுதி வருகிறேன்.


உங்களது கன்னிச் சிறுகதைத் தொகுப்புக்கு எத்தனங்கள் என்ற நாமத்தினை ஏன் எவ்வாறு வைத்தீர்கள்?

அந்தச் சிறுகதைத் தொகுதி நான் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த போது எழுதப்பட்டது. எத்தனங்கள் என்ற தலைப்பில் ஒரு சிறுகதை குறித்த சிறுகதைத் தொகுதியினுள் இடம்பெற்றுள்ளது. எத்தனங்கள் சிறுகதை என் போன்ற ஒரு பெண் பிள்ளையின் எத்தனங்களைக் கொண்டு எழுதியிருந்ததோடு அந்தக் கதைக்குரிய தலைப்பும் எனது முதல் தொகுப்புக்குப் பொருத்தமான தலைப்பாக இருந்தமையால் அப்பெயரையே எனது முதல் சிறுகதைத் தொகுதிக்கு வைத்தேன்.


உங்களது சிறுகதைகளில் பெண் சார்ந்த பாத்திரப் படைப்பு, கதைச் சூழல் போன்றவற்றை எந்தக் கோணத்திலிருந்து எழுதியிருக்கின்றீர்கள்? 

நான் வாழும் சமூகத்திலிருந்து என் மனதை நெருடிய விடயங்களே எனது எழுத்துக்களாகியுள்ளன. பெண்கள் சார்ந்த பிரச்சினைகள் என்று சொல்லும் போது அவர்கள் வாழ்க்கையில் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளாகவே அவை இருக்கின்றன. 


இருளைக் கிழித்த கோடு சிறுகதை நூல் வெளியீடு தொடர்பாகக் குறிப்பிட விரும்புவது என்ன?

எத்தனங்கள் சிறுகதைத் தொகுதி வெளியாகி பத்து வருடங்களின் பின்புதான் இருளைக் கிழித்த கோடு நூலாக்கம் பெற்று வெளிவந்தது. சிறுகதைகளை அவ்வப்போது எழுதியிருந்தாலும் அவ்வாறு எழுதியவற்றுள் தெரிந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளே இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. இக்கதைகள் பல பரந்துபட்ட களங்களையும் மையக் கருக்களையும் உள்ளடக்கியவையாகக் காணப்படுகின்றன. இச்சிறுகதைத் தொகுதி தேசிய மொழிகள் பிரிவு, பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சினால் தெரிவு செய்யப்பட்டு சகோதர மொழியில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. மதிப்புக்குரிய ஜீ.எஸ். சரத் ஆனந்த அவர்கள் மொழிபெயர்த்துள்ளார். எமது மக்களின் வாழ்வியல் போராட்டங்களை சகோதர மொழி இனத்தவர்களும் வாசிக்கக் கிடைத்துள்ளதோடு எனது எழுத்து இன்னொரு மொழியாக்கத்தில் வெளிவருகின்றபோது அது இரட்டிப்பு மகிழ்வையும் ஊக்குவிப்பையும் தருகின்றது. 

இந்நூலுக்கான வெளியீட்டு நிகழ்வு தேசிய கலை இலக்கியப் பேரவையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்பெற்றது. அவ்வாறே நாடு கடந்து புலம்பெயர் தமிழர்களிடத்தில் 2023 இல் இதற்கு அறிமுக விழா இடம்பெற்றமை இரட்டிப்பு மகிழ்ச்சி. இதனை லண்டன் விம்பம் ஏற்பாட்டில் ராஜா அண்ணா என்பவர் சிறப்பாக ஒழுங்கமைத்து நடாத்தியிருந்தார். 


சிறுகதைகள் யதார்த்தத்தைப் பிரதிபலிக்க வேண்டுமா? பொதுவாக சிறுகதைகளில் வர்ணனைகளும் இடம் பெறலாமா?

கட்டாயமாகப் பிரதிபலிக்கப்படல் வேண்டும். சமூகத்தின் தெரியாத பல பக்கங்களை, மனிதர்களின் பிரச்சினைகளைச் சொல்ல வேண்டும். ஒரு இலக்கியகாரராக, படைப்பாளியாக என் ஆயுதம் எழுத்துத்தான். அதில் யதார்த்தம்; நான் வாழும் சமூகத்தின் பிரதிபலிப்பு. என் மக்களின் இன்ப துன்பங்கள் பகிரப்படாதவிடத்து அவற்றின் இருப்பு கேள்விக்குள்ளாவதோடு படைப்பாளி எனச் சொல்லிக்கொள்வதன் பொருள் யாது என்ற கேள்வியும் எழுகின்றது. எல்லாக் கதைகளும் துன்பத்தையும் அழுகையையும்தான் சொல்ல வேண்டும் என்று இல்லை. மகிழ்ச்சியை, வெற்றியைக் கொண்டாடுபவையாகவும் இருக்கலாம். ஆனால் யதார்த்தத்தைப் பிரதிபலிக்க வேண்டும். 

அடுத்து வர்ணனைகள் பற்றிக் கேட்டிருக்கிருக்கிறீர்கள். ஒரு விடயத்தை எப்படி வாசகரிடம் கொண்டு செல்லலாம் எனும் போது இலக்கிய நயம், வர்ணனைகள் முக்கியம் பெறுகின்றன. துன்பியலைக்கூட வாசகர் மனதில் நிலைத்து நிற்கத்தக்கதான வெளிப்படுத்தல், வர்ணனை மூலம் சொல்லலாம். இனிப்பு தித்திப்பாக இருக்கும் என்று அதிகமாகச் சாப்பிட்டால் தெவிட்டுவதைப் போன்றுதான் வர்ணனையும் அளவோடு கச்சிதமாக, ஆனால் கனதியாகச் சொல்லிச் செல்லும் போது வாசகர் எங்கு சென்றாலும் அந்தப் படைப்பும் அவர் மனதோடு கூடவே பயணிக்கும். 


சிறுகதை நூல்களை மட்டுமே நீங்கள் வெளியீடு செய்து வருகின்றீர்கள். அப்படியானால் கவிதைகள் மீது உங்களுக்கு ஆர்வமில்லையா?

கவிதைகள் மீது அதிக ஆர்வமும் விருப்பமும் இருந்தாலும் அவற்றை இரசித்துப் படிப்பேன். கவிதைகள் பலவற்றை எழுதியிருக்கிறேன். ஆனால் இதுவரை நூலாக்கம் இடம்பெறவில்லை. சிறுகதைகளைத்தான் அதிகம் எழுதி வருகின்றேன்.


ஆரம்பகால எழுத்தாளர்களுக்கும் சமகால எழுத்தாளர்களுக்குமிடையே காணப்படும் வேறுபாடு குறித்து உங்களுடைய கருத்து என்ன?

ஆரம்பகால எழுத்தாளர்கள், எழுத்தாளர்கள் என அடையாளப்படுத்தப்படுவது கடினமாக இருந்தது. அவர்களது படைப்புக்களை வெளிக்கொணர்வதற்கான களங்கள் மிகவும் அரிதாகவே காணப்பட்டன. அவ்வாறே அவர்கள் படைப்புகளை வெளிக்கொண்டு வரும்போது, அதில் அவர்கள் சமூகத்திற்கு கையளிக்கும் போது காணப்பட வேண்டிய பொறுப்புணர்ச்சி மற்றும் எழுத்துக்களின் தெளிவு, விடயதானம் என்பன மிகவும் கவனமாகக் கையாளப்பட்டிருக்கும். ஆனால் தற்காலத்தில் எழுத்துக்களுக்கான களங்களும் அதிகம். எவரும் எதுவும் எழுதலாம் என்ற நிலையில் பாலை மட்டும் பருகும் அன்னத்தின் நிலையில் வாசகர்கள். இங்கு வாசகர்கள்தான் வாசிப்பைக் கூர்மைப்படுத்தி சிறந்த எழுத்துக்களை வாசிக்கும் போது சமூகத்தை மாற்ற முனையும் எழுத்தாளர் இனங்காணப்பட்டு நிலைநிறுத்தப்படுவார். இது உடனடியாக நிகழும் என்றில்லை. காலம் கடந்தும் வாழும் எழுத்துக்களே உண்மையான படைப்பாளியை இனங்காட்டும். வாசிப்பைக் கூர்மைப்படுத்தும் எழுத்தாளன் மேலும் தன்னை வளர்த்துக்கொள்ளலாம். அதுவே அவரை எக்காலத்திலும் சிறந்த படைப்பாளராக்கும்.


சமூக ஊடகங்கள் உங்கள் படைப்புகளுக்கு முக்கியத்துவம் வழங்குகின்றனவா?

தேவையேற்படுகின்றபோது சமூக ஊடகங்களை எனது படைப்பாக்கத்திற்கும் இலக்கியச் செயற்பாடுகளுக்கும் பயன்படுத்துகின்றேன். அவ்வாறே எனது இலக்கிய முயற்சிகளுக்கு தேவையானபோது அவை பங்களிப்பும் வழங்குகின்றன.


ஒரு ஆசிரியராக பணியாற்றிய காலங்களில் மாணவர்களிடையே எவ்வாறு வாசிப்பை ஊக்குவித்தீர்கள்?

பாடவேளையில் மாணவர்களே வாசிப்பதற்கான சந்தர்ப்பங்களை வழங்குவேன். வகுப்பாசிரியையாக கடமையுயாற்றிய காலங்களில் வகுப்பறை நூலகம் என சிறிதளவில் ஒழுங்கமைத்து வைத்திருந்தோம். மாணவர்கள் நேரம் கிடைக்கும்போது தமது வாசிப்பை மேம்படுத்தக் கூடியவகையில் அது உதவியாக இருந்தது. பாடசாலை நூலகத்தைப் பயன்படுத்துவதற்கு இயன்றவரை வழிப்படுத்தினேன். மாணவர்களை நேரடியாக வாசிப்பதற்குத் தூண்டுவதைவிடவும் மறைமுகமான கற்றற் செயற்பாடுகள் மூலமாக அவர்கள் வாசிப்பிற்குள் ஈர்க்கப்படும்போது அவர்கள் இயல்பாகவே வாசிப்புப் பழக்கத்தைக் கடைப்பிடிக்கக் கூடியதாக இருக்கும்.


பெண்கள் மீதான ஒடுக்குமுறை என்பது ஆண் சமூகத்திலிருந்து மட்டுமே வருகிறதது என்று சொல்ல முடியுமா?

நிச்சயமாக இல்லை, பெண்களாலும் இடம்பெறுகின்றது. குடும்ப வாழ்விலும் சரி, அலுவலகங்களிலும் சரி பெண்கள் மீதான ஒடுக்கு முறை பெண்களாலும் இடம்பெறுகின்றது. குடும்பத்தில் பெண் பிள்ளைகள் எவ்வாறு வளர்க்கப்பட வேண்டும் என்ற பக்குவம் ஆண் பிள்ளைகள் மீதான வளர்ப்பிலும் காட்டப்பட வேண்டும். பெண் பிள்ளைகளோடு எப்படிப் பழக வேண்டும் என்ற பக்குவத்தை, அவர்களது உடலியல் மாற்றங்கள், அவர்களை மதிப்பு மிக்கவர்களாக நோக்கும் பக்குவம் என்பவற்றுடன் ஆண் பிள்ளைகள் வளர்க்கப்பட வேண்டும். திருமண வாழ்விற்கும் அவர்கள் வயதால் மட்டுமல்ல மனதளவிலும் பக்குவப்பட்டவர்களாக வளர்க்கப்பட வேண்டும். 

இங்குதான் சில குடும்பங்களில் பாசம் என்ற பெயரில் இடம்பெறும் திணிப்புக்கள் இறுதியில் குடும்ப வாழ்வில் மனைவியை அடிமையாக்குவதாக மாற்றம் பெறுகிறது. அவ்வாறு அடிமையாக்கி வாழ்வதைப் பார்த்து ஷமகன் மனைவியை தன் கட்டுப்பாட்டில்தான் வைத்திருக்கிறான்| என்ற எண்ணப் பாங்கு இன்னும் எம் சமூகத்திலிருந்து மாறவில்லை. இதை மாற்றுவதற்கு முதலில்  பெண்களின் மனநிலை மாறவேண்டும். ஒரே ஒரு விடயம்தான். திருமணம் செய்து மனைவியை அடிமையாக்குபவன் அடிமையின் கணவனாகிறான். திருமணம் செய்து மகாராணியாக மனைவியை அழகு பார்ப்பவன் அரசனாகிறான். இவ்வளவுதான். 

அடுத்து பெண்களே தம்மை பலவீனமானவர்களாக தன்னம்பிக்கை அற்றவர்களாக வெளிப்படுத்துவதும் இன்னொரு காரணம். மாற்றம் எங்களுக்குள்ளே இருந்துதான் ஏற்பட வேண்டும். தற்பெருமையும் ஆணவமும் தான் கூடாது. ஆனால் என்னாலும் இயலும் என்ற தன்னம்பிக்கை ஒவ்வொரு பெண்ணுக்கும் வேண்டும். குடும்ப வாழ்வில் பெண்களை மதித்து சம உரிமையுடன் நோக்கப் பழகிக் கொண்டால் தொழிற் துறையில் பெண்களுக்கான சம உரிமைக்கு குரல் எழுப்ப வேண்டிய தேவை இருக்காது.


பாடசாலை மாணவர்களுக்காக நீங்கள் எழுதி வெளியிட்டுள்ள தமிழ்ப் பாட மற்றும் தமிழ் இலக்கிய நூல்கள் தொடர்பாக கூற விழைவது? 

நான் ஆசிரியையாகப் பணியாற்றிய காலத்தில் மாணவர்களது கற்பித்தல் தேவைக்காகப் பல விடயங்களைத் தேடிச் சேகரிப்பேன். கற்றல் செயற்பாடுகளுக்கான தயார்ப்படுத்தல்களை சேகரித்து வைத்திருப்பேன். அந்த விடயங்களை மேலும் பல மாணவர்களும் தெரிந்து தமது கற்றலை விருத்தி செய்யலாம் என்ற நோக்கில் தமிழ் மொழியும் இலக்கியமும், இலக்கிய நயம், சைவநெறி ஆகிய பாடங்களுக்கான வழிகாட்டி நூல்களை எழுதியிருந்தேன். இவற்றோடு மாணவர்களது மொழி விருத்திக்கான மொழி வளம், கட்டுரைக் கதம்பம், ஆக்கத்திறன் மேம்பாட்டிற்கான இன்பத் தமிழ்; போன்ற நூல்களும் மாணவர்களது மொழியறிவு விருத்திக்குத் துணை நிற்கின்றன. மேலும் சாதாரண தர மாணவர்களுக்காக எனது சுய தயாரிப்பில் எழுதப்பட்ட மாதிரிப் பரீட்சை வினாத்தாள் தொகுப்பானது மாணவர்களுக்கு மிகவும் பயனுடையாத விளங்குகின்ற நூலாகக் காணப்படுகின்றது. இவை இலங்கையின் மிக நீண்டகால வெளியீட்டாளர்களான லங்கா புத்தகசாலை வெளியீடுகளாக வெளியிடப்படுகின்றமை எனக்குப் பெருமையாகவும் இருக்கின்றது.


இலக்கிய மாநாடுகளில் பங்குபற்றிய உங்கள் அனுபவங்கள் குறித்து?

இலங்கையிலும் இந்தியாவிலும் நடைபெற்ற இலக்கிய மாநாடுகளில் பங்குபற்றி கட்டுரைகள் சமர்ப்பித்திருக்கிறேன். 


ஈழத்துச் சிறுகதையுலக வரலாற்றில் உங்களது சிறுகதைகள் எவ்வாறான இடத்தினைப் பெற்றுள்ளது?

அதை இப்போது தீர்மானிக்க முடியாது. எனது படைப்புகள் வாசகர்களின் மனதைத் தொட்டு நிலைபெறும் காலம் வரை அது வாழும் என்று நினைக்கிறேன். என் படைப்பின் உள்ளடக்கம் எவ்வாறு என் சமூகத்திடம் இருந்து வந்ததோ, அதுபோலவே படைப்பின் ஆயுட்காலமும் என்னால் தீர்மானிக்க முடியாதது. ஆனால் சமூகத்தின் இன்பமும் துன்பமும் என் எழுத்துக்களால் வெளிக்கொணரப்படும்.


உங்களது அடுத்த படைப்பு எது பற்றியதாக அமையும்? எப்போது வெளிவரும் என்று கூற முடியுமா?

இப்போதுவரை சிறுகதைத் தொகுதிகளை வெளியிடுவதற்குத்தான் உத்தேசித்திருக்கிறேன்.


உங்களுக்கு அல்லது உங்களது படைப்புகளுக்காக இதுவரை பெற்றுக்கொண்ட பாராட்டுகள், பரிசுகள் குறித்துக் கூறுங்கள்? 

பாராட்டுகள், பரிசுகள், விருதுகள் எப்போதும் எங்களை ஊக்குவிக்கும் சிறந்த விடயங்கள்தான். பாடசாலைக் காலத்தில் நான் பெற்ற பரிசில்கள்தான் என்னை இனங்காட்டின. ஆனால் எழுத்துலகில் நான் பிரவேசித்தபின் விருதுகளுக்காக அனுப்புவதற்கு படைப்புகளை எழுதி வைத்திருப்பதில்லை. எனது சிறுகதைத் தொகுதிகளையும் அனுப்பவில்லை. அவ்வாறு அனுப்ப வேண்டும் என்று நினைப்பதுமில்லை. 

செம்பியன் செல்வன் நினைவாக அண்மையில் நடாத்தப்பட்ட சிறுகதைப் போட்டிக்கு இன்னொரு வ(லி)ழி என்ற எனது சிறுகதையை அனுப்பியிருந்தேன். அதற்கு இரண்டாம் பரிசு கிடைத்தது. படைப்பை எழுதி சிறிது காலத்தின் பின்னர் மீண்டும் வாசித்து, பத்திரிகைகளுக்கோ சஞ்சிகைகளுக்கோ நான் அனுப்பிவிடுவேன். விருதுகளுக்காக எனது படைப்புகளை வைத்துக் கொண்டிருப்பதில்லை. வாசகர்கள் மனதில் சிறந்த எழுத்து என்ற இருப்பும் சமூகத்தில் சிறுமாற்றத்தையும் ஏற்படுத்துமாயின் அதுவே எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகும்.


இலக்கிய வாசகர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது என்ன?

எதை விதைக்கிறோமோ அதைத்தான் அறுவடையாகப் பெறமுடியும். எங்களிடம் இப்போது வற்றிச் செல்வது வாசிப்புப் பழக்கமே. இதை வீட்டில் பெற்றோர் முன்னெடுத்தாலே போதும். பிள்ளைகளுக்கும் இயல்பான பழக்கமாகிவிடும். வாசிக்கச் சொல்லி பிள்ளைக்குச் சொல்லிக் கொண்டிருப்பதைவிட பெற்றோர் வாசித்து விடயங்களைப் பகிரும்போது பிள்ளைகளும் இலகுவாகப் பழக்கப்பட்டு வாசிப்பில் மூழ்கிவிடுவார்கள். வாழ்க்கையில் எப்போதும் எங்களுக்கு மன ஆறுதலைத் தருவது, தேடலை ஊக்குவிப்பது நூல்களே. எப்போதும் வாசிப்பைக் கைவிடாது இருக்க வேண்டும். இலக்கியங்கள் மனதுக்கு இதம் தருபவை. ஒவ்வொருவரும் தமது துறைக்கு அப்பால் பல விடயங்களையும் கற்றறிந்தவர்களாக இருக்க வேண்டும். மனிதாபிமானம் கொண்டவர்களாக ஒவ்வொருவரும் வாழ்ந்தால் உலகம் மாற்றமடையும்.


இறுதியாக என்ன சொல்லப் போகின்றீர்கள்?

மகிழ்வான இத்தருணங்களை எனக்குத் தந்த தினகரன் பத்திரிகையின் இணைப்பிதழான செந்தூரம் இதழுக்கும் அதன் பிரதம ஆசிரியர் மற்றும் துணையாசிரியருக்கும் என்னை நேர்காணல் செய்த எழுத்தாளரும் பன்னூலாசிரியருமான ரிம்ஸா முஹம்மத் அவர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

58. அஷ்வினி வையந்தி அவர்களுடனான நேர்காணல்

கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட உதவி விரிவுரையாளர் அஷ்வினி வையந்தி அவர்களுடனான நேர்காணல்


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


உங்களைப் பற்றிய அறிமுகத்தைக் கூறுங்கள்?

எனது பெயர் சிவரூபினி. 'அஷ்வினி வையந்தி' என்ற புனைப் பெயரில் எழுதிக்கொண்டிருக்கும் நான் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட உதவி விரிவுரையாளராக தமிழ்க் கற்கைகள் துறையில் கடமையாற்றி வருகின்றேன். என்னுடைய அம்மா என்னைப் படிக்க வைப்பதற்காக மிகவும் கஷ்டப்பட்டார். சிறுவயதில் நானும், அண்ணாவும், அம்மாவும் வறுமையின் கோரப் பிடியில் சிக்கி இருந்தோம். ஆனாலும் அந்த வறுமை நிலையிலிருந்து மேலே வர வேண்டும் என்ற நோக்கோடு படிக்கத் தொடங்கினேன். படித்தால் மாத்திரம் போதாது. கஷ்டப்பட்டுப் படிக்க வைக்கின்ற அம்மாவையும், அண்ணாவையும் பெருமைப்படுத்தும் விதமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணிக்கொண்டேன். அதற்காக நான் தெரிவு செய்த துறைதான் இலக்கியம். இத்துறையில் நான் சாதிக்க வேண்டும் என்பதற்காக அஷ்வினி என்ற எனது வீட்டுப் பெயரையும், எனது அம்மாவின் பெயரையும் சேர்த்து அஷ்வினி வையந்தி என்ற புனைப் பெயரை வைத்துக்கொண்டு இலக்கியத் துறைக்குள் காலடி வைத்தேன்.


உங்கள் பாடசாலை வாழ்க்கை, பல்கலைக்கழக வாழ்க்கை ஆகியன இலக்கிய ஈடுபாட்டுக்கு எந்தளவில் உதவியாக அமைந்தது?

சிறுவயதில் இருந்தே புத்தகங்கள் மீது எனக்கு அலாதி விருப்பம். ஆனால் புத்தகங்கள் வாங்கி படிப்பதற்கான வசதிகள் இருந்ததில்லை. குறிப்பிட்ட ஒரு வயதில் அதாவது நான் உயர் தரம் படித்த காலத்தில் திஃ கிளிவெட்டி மகா வித்தியாலயத்தில் உள்ள நூல் நிலையத்தில் அதிகமான புத்தகங்களை வாசிக்கத் தொடங்கினேன். நான் புத்தகங்கள் வாசிக்கத் தொடங்கி சிறிது காலத்தின் பின்னர் நானும் ஒரு புத்தகம் எழுதினால் என்ன? என்ற எண்ணம் வரத் தொடங்கியது. அதன் ஆரம்ப கட்டமாக உயர் தரம் படித்துக்கொண்டிருக்கும்போது கவிதைகளை எழுதத் தொடங்கினேன். பின்னர் பல்கலைக்கழகம் சென்ற பின்னர் கற்றல் நடவடிக்கைகளோடு சேர்த்து இலக்கியத்திலும் எனது ஆர்வத்தைச் செலுத்தினேன். புத்தகங்கள் வாசித்தது மட்டுமன்றி புத்தகங்களை வாங்கிப் படிக்கவும் செய்தேன். எனது இலக்கிய ஆக்கங்களுக்கு எனது நண்பர்கள் ஆதரவினைத் தந்தார்கள். அதுமட்டுமன்றி எனது வீட்டிலும் பெரிய ஆதரவு இருந்தது. அத்தோடு எனது பாடசாலை ஆசிரியர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் போன்றோரும் என்னை வழிநடத்திச் சென்றார்கள். அவர்களின் வழிகாட்டுதல் என்னை ஒரு எழுத்தாளராக உருவாக்கியது எனலாம்.


முதன் முதலாக எழுத்துத் துறைக்குள் வந்த அனுபவம் பற்றிப் பகிர்ந்துகொள்ளுங்கள்?

முதன்முதலாக உயர் தரம் படிக்கும்போது கவிதை எழுதத் தொடங்கினேன். அந்தக் கவிதைதான் என்னை எழுத்துத் துறைக்குள் அறிமுகம் செய்து வைத்தது. அத்துடன் நண்பர்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றுத் தந்தது. மட்டுமல்லாமல் எனது வீட்டிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுத் தந்தது. எனது வீட்டாரும், நண்பர்களும் தந்த உற்சாகம் என்னைத் தொடர்ந்து எழுத வைத்தது. 


முதன் முதலாகக் கவிதை எழுதிய தருணம் எப்படியிருந்தது?

எனக்கு எனது அம்மா மீது அளவுகடந்த பாசம் உண்டு. ஆனால் அதை அவரிடம் வெளிப்படுத்தியது கிடையாது. எதையாவது சாதிக்க வேண்டும் என்ற வெறியில் ஓடிய ஓட்டத்தில் பல துயரங்களை கடந்து வந்ததால் பாசத்தை வெளிப்படையாகக் கட்டிக்கொள்ளவில்லை. எப்போதும் அம்மா மீது கோபப்பட்டுக் கொண்டே இருப்பேன். ஆனாலும் என்றேனும் ஒருநாள் என் அம்மாவைப் பற்றி வெளியுலகம் பேச வேண்டும் என்பதற்காக ஓடிக்கொண்டே இருந்தேன். அந்த ஓட்டத்தின் ஆரம்பப் புள்ளிதான் எனது கவிதைக்கான அடித்தளமாக இருந்தது. முதன்முதலாக நான் எழுதிய கவிதை பாசத்தின் வெளிப்படாகத்தான் அமைந்தது. அதாவது முதன்முதலாக நான் எனது அம்மாவைப் பற்றித்தான் கவிதை எழுதினேன். இப்படித்தான் கவிதை இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல் மனதில் தோன்றிய முறையில் எழுதிய கவிதைதான் அது.


உங்களது முதலாவது ஆக்கம் எப்போது? எந்த ஊடகத்தில் வெளிவந்தது?

எனது முதலாவது ஆக்கமாக கவிதைதான் வெளிவந்தது. அதாவது நான் உயர் தரம் படிக்கும்போது எனது முதலாவது கவிதை 2014 இல் பள்ளிக் கூடம் என்ற தலைப்பில் வானவில் என்ற சஞ்சிகையின் ஒக்டோபர் மாத இதழில் வெளிவந்தது.


இதுவரை எத்தனை நூல்கள் வெளியிட்டுள்ளீர்கள்? அந்த நூல் பற்றிக் குறிப்பிடுங்கள்?

இதுவரை "யாவும் ஆனந்தமே" என்ற கவிதை நூலை மட்டுமே வெளியிட்டுள்ளேன். இந்நூலில் பாசம், தன்னுணர்வு போன்ற கருப்பொருட்களுடன் பொதுவான சில விடயங்கள் பற்றியும் கவிதைகளை எழுதியுள்ளேன். இப்படித்தான் கவிதை இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடில்லாமல் எனக்குத் தோன்றிய வரையறைகளைக் கொண்டு கவிதையின் உருவத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் உள்ளடக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதிய கவிதைகள்தான் இந்நூலில் காணப்படுகின்றன.


உங்களது முதல் பிரசவமான "யாவும் ஆனந்தமே" என்ற உங்களது கவிதைத் தொகுதியின் தலைப்பு குறித்துக் கூறுங்கள்?

உண்மையில் இந்தத் தலைப்பு பற்றி எங்கேனும் பேச வேண்டும் என நினைத்துக்கொண்டேன். அதற்கான சந்தர்ப்பத்தை இவ்விடத்தில் ஏற்படுத்தித் தந்தமைக்கு மிக்க நன்றி. நாம் வாழும் உலகத்தில் நாம் காணுகின்ற எல்லாப் பொருட்களும் நமக்கு ஆனந்தத்தை தரத்தான் செய்கின்றன. ஆனால் நாம் அவை தருகின்ற கெட்ட விடயங்களை மாத்திரம் பேசிக்கொண்டும், பார்த்துக்கொண்டும் இருக்கின்றோம். அதனால் பல கெட்ட விளைவுகள் உருவாகின்றன. ஆனால் ஒரு விடயத்தில் இருக்கின்ற நல்ல விடயங்களை எடுத்து நோக்கினால் வாழ்க்கை மகிழ்ச்சி மிக்கதாக அமையும். எனவே நாம் காணுகின்ற அனைத்திலும் ஆனந்தம் உண்டு. அதை நாம் பார்க்கத் தவறுகின்றோம். அவ்வளவுதான். எனவே எல்லாமே நமக்கு ஆனந்தத்தைக் கொடுக்கத்தான் செய்கின்றன. அதனால்தான் யாவும் ஆனந்தமே என்ற தலைப்பை எனது முதல் கவிதை நூலுக்கு வைத்துள்ளேன். அத்தோடு அத்தலைப்பில் கவிதை ஒன்றையும் எழுதியுள்ளேன். அக்கவிதை எனது கவிதைப் புத்தகத்தில் முதலாவது கவிதையாக இடம் பிடித்துள்ளது.


உங்கள் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ள கருப்பொருட்கள் யாவை? இவற்றினூடாக நீங்கள் சொல்ல முனையும் விடயங்கள் என்ன?

எனது கவிதை நூலில் தாய்ப் பாசம், பெண்களின் அடிமைத்தனம், தனிமை, மத நல்லிணக்கம், தனிமனிதனுக்கு நடைபெறுகின்ற சில விடயங்கள் போன்ற விடயங்களைப் பற்றி எழுதியுள்ளேன். இக்கவிதைகள் மூலம் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கான தீர்வுகள் பற்றியும் பேசியுள்ளேன். 

குறிப்பாக பெண்களுக்கு நடைபெறுகின்ற பிரச்சினைகளில் இருந்து அவர்கள் மீண்டு வர வேண்டும். சமூகத்தில் நடக்கின்ற அடிமைத்தனங்களுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் போன்ற சிந்தனைகளைப் பற்றிப் பேசியுள்ளேன். அத்தோடு மனிதர்களிடத்தில் நல்ல சிந்தனைகளை வலுப்படுத்த வேண்டியும் சில கவிதைகளை எழுதியுள்ளேன். 


மதம், இனம், மொழி போன்ற பாகுபாட்டை வைத்துக்கொண்டு மனிதன் தங்களுக்குள்ளே முரண்படும் நிலை இல்லாது போக வேண்டும், மனிதம் என்ற சொல்லால் மக்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும், ஒரு கட்டுப்பாட்டிற்குள் நின்றுகொண்டு மனிதன் என்னும் பெயரில் அரக்கர்களாக வாழ்ந்தது போதும் எல்லோரையும் சக மனிதனாக மதித்து நடக்க வேண்டும் போன்ற கருத்துக்களை எனது கவிதைகளுக்கூடாக வலியுறுத்துகின்றேன்.


நீங்கள் இதுவரை அதிகமாக கவிதைகளையே எழுதியுள்ளீர்கள், இலக்கியத்தின் ஏனைய துறைகளில் ஈடுபாடு காட்டும் அக்கறையில்லையா?

அப்படி சொல்வதற்கில்லை. நான் கவிதைகள் மாத்திரமில்லை. புத்தக விமர்சனம், சிறுகதை, அனுபவக் கட்டுரைகள் போன்ற இலக்கியத் துறைகளிலும் ஈடுபாடு காட்டிக்கொண்டுதான் இருக்கின்றேன். அத்தோடு பல்கலைக்கழகங்களில் நிகழ்த்தப்படும் ஆய்வு மாநாடுகளில் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்து கொண்டும் இருக்கின்றேன். எனது சிறுகதைகள் பல "சிறுகதை மஞ்சரி" என்ற சஞ்சிகையில் வெளிவந்துள்ளன. 


மித்திரன், ஜீவநதி, எங்கட புத்தகங்கள் போன்ற சஞ்சிகைகள் மற்றும் பத்திரிகைகளில் எனது புத்தக விமர்சனங்கள் வெளிவந்துள்ளன. இவைற்றையெல்லாம் சேர்த்து புத்தகமாக வெளியிட வேண்டும் என்பது எனது எண்ணம். ஆனால் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக அவை எல்லாம் இதழ்களில் வந்த ஆக்கங்களாகவே உள்ளன. என்றேனும் ஒருநாள் இத்தகைய ஆக்கங்களும் புத்தகமாக வெளிவரும் என்ற நம்பிக்கையோடு பயணிக்கின்றேன்.


வாசகர்கள் மத்தியில் உங்கள் கவிதைகளுக்கான வரவேற்பு எந்தளவில் உள்ளது?

ஆரம்ப காலத்தில் அதாவது 80, 90 காலப் பகுதியைச் சேர்ந்த வாசகர்கள் சிலர் குறிப்பிட்ட மரபுக்குள் கவிதை நின்றுவிட வேண்டும் எனவும் குறிப்பிட்ட விதிமுறைகளைக் கொண்டிருக்க வேண்டும் எனவும் எதிர்பார்க்கின்றார்கள். அப்படி எதிர்பார்ப்பவர்கள் எனது கவிதைகளைவிட புத்தக விமர்சனங்கள் நன்றாக உள்ளதாகக் குறிப்பிடுகின்றார்கள். ஆனால் வேறு சிலரோ வித்தியாசமான முறையில் எழுதுகிறேன் எனவும் தொடர்ந்து எழுதுமாறும் குறிப்பிடுகின்றார். 


பேராசிரியர் யோகராசா, பேராசிரியர் அம்மன்கிளி முருகதாஸ் போன்றோர் எனது கவிதைகளை விரும்பிப் படிக்கும் வாசகர்கள்தான். பேராசிரியர் யோகராசா அவர்கள் வித்தியாசமான முறையில் எழுதுகிறேன் எனவும் தொடர்ந்து எழுதுமாறும் கூறி வருகின்றார். இதைத் தவிர்த்து இன்றைய கால கட்டத்தில் உள்ள பலர் எனது கவிதைகளை விரும்பிப் படிக்கின்றார்கள். நான் எனது வாசகர்களுடன் நெருக்கமான தொடர்புகளை வைத்துள்ளேன். அவர்களை நான் நேசிக்கின்றேன். அவர்களை திருப்திப்படுத்த வேண்டி எழுதிகொண்டிருக்கின்றேன். என் எழுத்துக்களும் அவர்களை திருப்திப்படுத்தும் என்றே நம்புகின்றேன். அதை நான் நேரடியாகக் கண்டும் இருக்கின்றேன்.


நீங்கள் எழுதிய பல கவிதைகளில் உங்கள் மனதில் பதிந்துள்ள ஒரு கவிதையைப் பற்றிச் சொல்வீர்களா? 

அவள் ஒரு சிறந்த தாய் என்ற தலைப்பில் அம்மாவிற்காக ஒரு கவிதை எழுதினேன். உண்மையில் அந்தக் கவிதையில், எனது அம்மா நிஜ வாழ்க்கையில் வாழ்ந்த வாழ்க்கை பற்றியே எடுத்துக்கூறியுள்ளேன். அந்தக் கவிதை வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுக்கொண்டது. இந்தக் கவிதையை எனது நூலில் வாசகர்கள் வாசித்துப் பார்க்கலாம்.


உங்களுக்குப் பிடித்த கவிஞர்கள் யாவர்? உங்கள் எழுத்துக்களில் எந்தக் கவிஞரின் தாக்கம் காணப்படுகின்றது?

உண்மையைச் சொல்லப்போனால் நான் ஈழத்து படைப்புக்களைப் படிப்பதைவிட தென்னிந்திய படைப்புக்களையும், உலக படைப்புக்களையும் படிப்பது அதிகம். குறிப்பாக நா. முத்துக்குமார், யுகபாரதி, வைரமுத்து ஆகியோரின் கவிதைகளை நிறையவே படித்துள்ளேன். அவர்களுடைய கவிதைகளின் தாக்கம் என்னுடைய கவிதைகளில் இருக்கின்றது என்று சொல்வதற்கில்லை. எனக்குத் தோன்றிய விதத்தில் எனது கவிதைகளை எழுதுகிறேன். அவ்வளவுதான்.


உங்கள் கவிதைகள் மூலம் சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்று நம்புகின்றீர்களா?

ஆம் நிச்சயமாக. எனது கவிதைகளை வாசிக்கும் வாசகர்கள் பலரைப் பார்த்துள்ளேன். குறிப்பாக பெண் வாசகர்கள் பலர் என்னைப் போல் வர வேண்டும் எனவும், எனது கவிதைகள் தங்களது வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன எனவும் நேரடியாகவே என்னிடம் குறிப்பிட்டுள்ளார்கள். அது மாத்திரமின்றி சாதி, மத கட்டுக்கோப்புக்களில் இருந்து விடுபட்டு எல்லோரையும் சக மனிதனாக மதிக்கும் நிலையை எனது கவிதைகள் வற்புறுத்துகின்றன. எனவே என்னுடைய கவிதைகள் சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் என நான் உறுதியாக நம்புகின்றேன்.


இதுவரை எத்தனை சிறுகதைகள் எழுதியுள்ளீர்கள்? உங்களுக்குள் சிறுகதைகள் எவ்வாறு உருவாகின்றது?

குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. ஆனால் பத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளேன். எனது அம்மாவை வைத்து கற்பனையுடன் கூடிய சிறுகதைகள் பலவற்றை எழுதியுள்ளேன். அத்தோடு நடைமுறையில் நான் சந்தித்த பல மனிதர்களின் பிரச்சினைகளைப் பேசுபொருளாகக் கொண்டும் சில சிறுகதைகளை எழுதியுள்ளேன்.


உங்களது இலக்கிய வாழ்வில் உங்களுக்கு உதவியவர்கள் அல்லது மறக்க முடியாதவர்கள் இருப்பின்?

நான் இலக்கிய உலகிற்கு வருவதற்கு பலர் உதவி செய்துள்ளார்கள். குறிப்பிட்டு இவர்தான் அந்த நபர் எனச் சொல்ல முடியவில்லை. ஏனெனில் எனக்கு உதவியவர்களாகப் பலர் இருக்கிறார்கள். 


உங்களது படைப்புகள் பெண்களின் பிரச்சினைகளைப் பேசியிருக்கின்றதா?

நிச்சயமாக. பெண்கள் சமூகத்தில் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் பலதைப் பற்றியும், அவர்கள் அதை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் எனவும் முடிந்தவரை குறிப்பிட்டுள்ளேன். 


கவியரங்குகளில் கலந்துகொண்ட அனுபவங்கள் குறித்தும் பகிர்ந்து கொள்ளுங்கள்?

படிப்பில் கவனம் செலுத்திய காரணத்தால் கவியரங்குகளில் கலந்து கொண்ட நிகழ்வுகள் குறைவுதான். ஒரே ஒரு தடவை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மொழித் தினத்தில் நடைபெற்ற கவியரங்கு ஒன்றில் கலந்து கொண்டேன். அந்தக் கவியரங்கு தமிழ் மொழியின் முக்கியத்துவம் பற்றியதாக இருந்தது. அந்நிகழ்வில் கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்க் கற்கைகள் துறையைச் சேர்ந்த பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் எனப் பலரும் வருகை தந்திருந்தார்கள். குறிப்பிட்ட கவியரங்கில் கலந்து கொண்டமையால் அவர்கள் முன்னிலையில் என்னைக் கவிதைத் துறையிலும் அடையாளப்படுத்திக்கொண்டேன்.


உங்கள் இலக்கிய வாழ்வில் உங்களால் மறக்க முடியாத சம்பவம் ஒன்றைக் குறிப்பிடுங்கள்?

மறக்க முடியாத சம்பவம் என்றால் எனது கவிதை நூல் வெளியீட்டு விழாதான். என்றேனும் ஒருநாள் புத்தகம் எழுதி வெளியிட வேண்டும் என்பது எனது நீண்டநாள் ஆசையாக இருந்தது. ஆனால் அதற்கானக் களம் அமையவில்லை. திடீரென அதற்கான வாய்ப்பு என்னைத் தேடி வந்தது. இருபத்தியெழு வருட ஆசை நிஜமாகப் போவதை எண்ணி மகிழ்ந்துகொண்டேன். அத்தோடு அன்றைய நிகழ்வுக்கு மட்டக்களப்பில் இருந்து பேராசிரியர் யோகராசா அவர்கள் மிகுந்த விருப்பத்தோடு வருகை தந்திருந்தார். அது எனக்கு மட்டில்லாத மகிழ்ச்சியை அளித்திருந்தது. அன்றைய நாள் எனது அம்மாவும், எனது அண்ணாவும் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. எத்தனை நாள் எதற்காக ஓடிக்கொண்டிருந்தேனோ அதை அடைந்த தருணம் அது. அன்றைய நாளை என்னால் மறக்கவே முடியாது.


இதுவரை நீங்கள் எழுதியுள்ள கட்டுரைகள் குறித்தும் குறிப்பிடுங்கள்?

நான் கட்டுரைகளைக் குறைவாகவே எழுதியுள்ளேன். நான் சேகரித்த புத்தகங்கள் பற்றி எங்கட புத்தகங்கள் என்ற சஞ்சிகைக்கு கட்டுரை ஒன்றை எழுதினேன். அத்தோடு கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாநாட்டுக்காக 2022 ஆம் ஆண்டு எனது ஆய்வுக் கட்டுரையின் ஒரு பகுதியை எழுதி அனுப்பினேன். அக்கட்டுரை மிகுந்த வரவேற்பைப் பெற்றுக்கொண்டது. முகநூலில் எனது நூல் தொடர்பான விமர்சனங்களைப் பார்த்து பல எழுத்தாளர்கள் என்னை நூல் விமர்சனம் எழுதித் தருமாறு கேட்டு எனக்குப் புத்தகங்கள் பலவற்றை அனுப்பி வைத்துள்ளார்கள். ஈழத்து, தமிழக, புலம்பெயர் நாடுகளில் உள்ள பல எழுத்தாளர்களின் ஆதரவும் எனக்கு உள்ளது.


எதிர்கால எழுத்து முயற்சிகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

தொடர்ந்து எழுதிக்கொண்டும், வாசித்துக்கொண்டும் இருக்க வேண்டும் என்பதே எனது ஆசையாகும். அத்தோடு சொந்தமாக எனக்கென்று ஒரு நூலகத்தையும் உருவாக்க வேண்டும். இந்தக் கனவுகளோடு சேர்த்து பல கவிதைகள், சிறுகதைகள், புத்தக விமர்சனம் என இலக்கிய ஆக்கங்களை தொடர்ந்து எழுதிக்கொண்டே இருப்பேன். அத்தோடு எனது அம்மாவின் வாழ்க்கை வரலாற்றினை நாவலாக எழுத வேண்டும் என்பது எனது நீண்டநாள் ஆசை.


உங்களது படைப்புக்களுக்கு இதுவரை கிடைத்த பாராட்டுக்கள், பரிசுகள், விருதுகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

எங்கட புத்தகங்கள் நடத்திய இலக்கியப் போட்டியில் எனது சிறுகதை மூன்றாம் இடத்தையும், கட்டுரை முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது. அத்தோடு சிறுகதை மஞ்சரியில் மாதம் மாதம் வெளிவருகின்ற சிறுகதைகளில் இருந்து சிறந்த சிறுகதை ஒன்று தெரிவு செய்யப்படடு 1000 ரூபாய் பணப் பரிசு வழங்கப்படும். அவ்வாறு எனது சிறுகதை ஒன்றும் தெரிவு செய்யப்பட்டது. அச்சிறுகதையின் தலைப்பு ஷபிறகு சொல்கிறேன்| என்பதாகும். 

இதைத் தவிர்த்து எனக்கு அறிவுச் சுடர் விருது (2021), கலைஞருக்கான பாராட்டு விருது (2023) போன்ற சில விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் அறிவுச் சுடர் விருது 2021 இல் கர்மவீரர் காமராசர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சிறந்த மாணவராக செயல்பட்டமையைப் பாராட்டி அனைத்துலகப் பொங்கு தமிழ்ப் பேரவை பண்ணுருட்டி செந்தமிழ்ச் சங்கத்தினால் (இந்தியா) வழங்கப்பட்டது. மற்றது கலைஞருக்கான பாராட்டு விருது அகத்தியர் கலைமா மன்றத்தினால் 2023 தை மாதம் 17 ஆம் திகதி வழங்கப்பட்டது.


சக இளந்தலைமுறைப் படைப்பாளிகளுக்கு நீங்கள் முன்வைக்க விரும்பும் ஆலோசனை என்ன? 

நந்தினி சேவியர் என்னும் இலக்கியப் படைப்பாளி ஒரு நேர்காணலில் இளந்தலை முறையினருக்கு சிறந்த திரைப்படங்களைப் பாருங்கள், சிறந்த நூல்களை வாசியுங்கள் அவற்றை பற்றி விமர்சனம் செய்யுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். அவருடைய கருத்துக்களையே இளம் படைப்பாளிகளுக்கு நானும் முன்வைக்கின்றேன். நிறைய வாசியுங்கள். நிறைய எழுதுங்கள். அவற்றைப் பற்றி கலந்துரையாடுங்கள். வித்தியாசமான முறையில் சிந்தியுங்கள். புதுப்புது விடயங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருங்கள். காலம் மிகவும் வேகமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. எனவே ஓரிடத்தில் தேங்கிக் கிடக்காமல் ஓடிக்கொண்டே இருங்கள். 

பிரச்சினைகள், சவால்கள் வாழ்வில் வந்துகொண்டேதான் இருக்கும். அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் முன்னோக்கி நகர்ந்துகொண்டே இருங்கள். சவால்கள் உருவாகும்போதுதான் வாழ்வை வெற்றிகொள்ள வேண்டும் என்ற நம்பிக்கை பிறக்கும். எனவே தேங்கி நிற்காமல் உங்கள் திறமையின் மேல் நம்பிக்கை கொண்டு பயணித்துக்கொண்டே இருங்கள். என்றேனும் ஒரு நாள் வெற்றி என்னும் இலக்கை அடையலாம்.


இந்த நேர்காணல் மூலமாக விசேடமாக ஏதாவது கூற விரும்புகின்றீர்களா?

எனது ஓட்டத்தில் நான் பல வலிகளைக் கடந்து வந்தேன். ஆனாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் எனது பயணத்தைத் தொடர்ந்தேன். எந்த இடத்தை அடைய வேண்டும் என நினைத்துக்கொண்டேனோ அந்த இடத்திற்கு வந்துவிட்டேன். வெற்றியின் சுவை எப்படி இருக்கும் என்பதை நுகர்ந்துவிட்டேன். ஆனாலும் இது வெற்றியில்லை என்ற எண்ணம் எனக்குத் தோன்றிக்கொண்டே இருந்தது.

வெற்றியை நோக்கி நாம் முன்னேறிக்கொண்டு வரும்போது விமர்சனங்களை முன்வைப்போர் ஏராளம். அவர்களை எதிர்த்து ஒன்றும் ஆகப்போவதில்லை. அவர்களை விட்டு விலகி முன்னோக்கி வாருங்கள். வாழ்வின் வெற்றி என்பது சக மனிதனை நேசித்தல், சக மனிதனோடு அன்புடன் நடத்தல் என்று சொல்லலாம். ஒவ்வொரு மனிதனுக்கும் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கின்றன. எனவே ஒவ்வொரு நபரைக் கடக்கும் போதும் புன்னகையோடு கடப்போம். என்னைப் பொறுத்தவரை இதுதான் வெற்றி. 


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


Saturday, July 15, 2023

57. கலாநிதி மரீனா இல்யாஸ் ஷாபி அவர்களுடனான நேர்காணல்

கலாநிதி மரீனா இல்யாஸ் ஷாபி அவர்களுடனான நேர்காணல்

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


உங்களைப் பற்றிய அறிமுகத்தை எமது வாசகர்களுக்காக சுருக்கமாகக் கூறுங்கள்?

நான் கண்டி மாவட்டத்தில் உள்ள தெஹிதெனிய மடிகே என்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன். ஆரம்பக் கல்வியை தெஹிதெனிய முஸ்லிம் மகா வித்தியாலயத்திலும், உயர் கல்வியை மாவனல்லை ஸாஹிராக் கல்லூரியிலும் கற்றேன். பின்னர் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் எனது பட்டப் படிப்பை முடித்துவிட்டு மேற்படிப்புக்காக மலேசியா சென்றேன். அதுதான் என் வெளிநாட்டு வாழ்க்கையின் தொடக்கப் புள்ளி. இப்போது நியூசிலாந்தில் வசித்து வருகிறேன்.


உங்களது குடும்பத்தவர்களுக்கும் இலக்கியத் துறையில் நாட்டம் உண்டா?

இலக்கியத் துறையில் ஈடுபாடுள்ளவர்கள் யாரும் என் குடும்பத்தில் இல்லை என்றுதான் கூற வேண்டும். ஆனால், என் வாசிப்பை அவர்கள் ஊக்கப்படுத்தினார்கள். என் எழுத்துப் பயணத்துக்கான பாதையைச் செப்பனிட்டுத் தந்தார்கள். என் தந்தை மர்ஹூம் இல்யாஸ் அவர்கள் சிங்கள மொழி மூலம் கல்வி கற்றவர். ஆனால் தமிழ் மொழியையும் காதலித்தார். என் எழுத்துக்களை நேசித்தார். நான் கேட்கும் புத்தகங்களை எனக்கு வாங்கித் தந்தார். எனது தாய் மாமனாரும், மத்ரஸத்துன்  நயீமியாவின் ஸ்தாபகருமான பிரபல சமூக சேவையாளர் மர்ஹூம் நயீம் ஹாஜியார் அவர்கள் என் ஆக்கங்கள் வெளியாகும் போதெல்லாம் எனக்குப் பரிசுகள் வாங்கித் தந்து, என்னை மேலும் எழுதத் தூண்டினார். திருமணத்தின் பின்னர் என் கணவர் எம்.வை.எஸ். ஷாபி அவர்கள் என் இலக்கிய முயற்சிகளுக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்.


நீங்கள் எந்த வயதில் எழுத ஆரம்பித்தீர்கள்? 

1980 களில் தான் எனது இலக்கியப் பயணம் ஆரம்பமாகியது. நான் எட்டாம் ஆண்டில் கல்வி கற்கும் போது தினகரன் பத்திரிகையின் சிறுவர் உலகம் பக்கத்தில் எழுத ஆரம்பித்தேன். 1980 ஆம் ஆண்டில் தினகரன் சிறுவர் உலகம் பகுதியில்தான் எமது பாடசாலை என்ற தலைப்பிலேயே எனது முதலாவது ஆக்கம் வெளிவந்தது. அதன் பிறகு கவிதை, சிறுகதைத் துறையில் மெது மெதுவாகக் காலடி எடுத்து வைத்தேன். என் முதல் கவிதை, முதல் சிறுகதை எல்லாமே தினகரன் பத்திரிகையில் தான் வெளியாகின. 1982 இல் எனது முதலாவது சிறுகதை 'வெதும்புகின்ற ஊமைகள்' என்ற தலைப்பில் வெளிவந்ததாகவே எனக்கு நினைவு. 

அத்துடன் தினகரன், சிந்தாமணி, நவமணி, மித்திரன், வீரகேசரி போன்ற தேசிய நாளிதழ்களில் எல்லாம் எனது பல்வேறு வகையான ஆக்கங்கள் வெளியாகின. வானொலியிலும் நான் நிறையவே எழுதினேன். சஞ்சிகைகள் பலவற்றிலும் எனது பல படைப்புகள் வெளியாகி உள்ளன. 


சமூகம் சார்ந்த பிரச்சனைகளை உங்கள் படைப்புகளில் எப்படிக் கொண்டு வருகின்றீர்கள்? உங்கள் படைப்புகளை பொதுவாக எப்படி வரையறுக்க விரும்புகிறீர்கள்?

இறைவன் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான ஆற்றலைக் கொடுத்துள்ளான். அதை சமூகத்துக்குப் பயனளிக்கும் விதத்தில் உபயோகிக்க வேண்டிய கடமை எங்களுக்கு இருப்பதாக நான் நம்புகிறேன். அதனால் நான் பொழுது போக்குக்காக எதையும் எழுதுவதில்லை. அன்றாட வாழ்வில் எனக்குக் கிடைக்கின்ற அனுபவங்களும், அவதானிப்புகளும் என் படைப்புளின் கருவாகின்றன. கற்பனைக் கதாபாத்திரங்களைக் கொண்டு மாய உலகை உருவாக்குவதில் எனக்கு இஷ்டமில்லை. இரத்தமும் சதையும் கொண்ட அன்றாட மனிதர்களின் வாழ்வியல் போராட்டங்களைப் படம் பிடித்துக் காட்ட வேண்டும் என்பதில் எனக்கு அதிக அக்கறை இருக்கிறது.


இதுவரை வெளிவந்த உங்களது நூல்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

01. குமுறுகின்ற எரிமலைகள் - சிறுகதைத் தொகுதி (1998)

02. தென்னிலங்கை முஸ்லிம்களின் தமிழ்ச் சிறுகதைகள் - ஓர் ஆய்வு (1998)

03. இரவைக் காக்கும் இமைகள் - கவிதைத் தொகுப்பு (2022)

04. என் சிறகில் சிக்கிய வானம் - பயணக் கட்டுரைகள் (2023)

ஆகிய 04 நூல்களையே இதுவரை நான் வெளியிட்டுள்ளேன்.


குமுறுகின்ற எரிமலைகள் என்ற உங்களது சிறுகதைத் தொகுதியிலுள்ள சிறுகதைகள் மற்றும் அதன் கருப்பொருட்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

இந்தத் தொகுதியில் எனது ஆரம்ப கால 11 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. அநேகமான சிறுகதைகள் நான் பாடசாலையில் படித்துக்கொண்டிருந்த போது எழுதியவை. இந்த நூலில் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தே நான் அதிகம் பேசி இருக்கிறேன். 




உங்களது இரண்டாவது நூல் வெளியீடான தென்னிலங்கை முஸ்லிம்களின் சிறுகதைகள் - ஓர் ஆய்வு நூல் பற்றி என்ன சொல்வீர்கள்?


நான் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த போது எழுதிய ஆய்வு நூல் இது. எழுத்தாளர் திக்குவல்லை ஸும்ரியின் அறிமுகம் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கிடைத்தது. அவரின் ஒத்துழைப்புடன் தான் இந்த நூலை எழுதினேன். தகவல் திரட்டுவதற்காக ஒரு தடவை திக்குவல்லைக்குச் சென்றேன். அப்போது அவர் திக்குவல்லையின் மூத்த எழுத்தாளர்கள் பலரை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். திக்குவல்லை ஷம்ஸ், திக்குவல்லை கமால், திக்குவல்லை ஸப்வான், திக்குவல்லை எஸ்.ஐ.எம். ஹம்ஸா என்று நிறையப் பேரிடம் தகவல் சேகரித்து வந்து இந்த ஆய்வை மேற்கொண்டேன். பின்னர் கல்ஹின்னை தமிழ் மன்றம் அதை வெளியிட முன்வந்த போது மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டேன்.

என் சிறுகதைத் தொகுப்பையும் கல்ஹின்னை தமிழ் மன்றமே வெளியிட்டது. இதில் விசேடம் என்னவென்றால், இந்தப் புத்தகத்துக்கான அறிமுக விழாவும் கூட திக்குவல்லையில் தான் நடந்தது. என் பங்களிப்பு எதுவுமே இல்லாமல், திக்குவல்லைக் கலைஞர்களின் ஒத்துழைப்புடன் இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது. நான் ஒரு விருந்தாளியைப் போல விழாவுக்குப் போய் வந்தேன்.


நீங்கள் இதுவரை எழுதியுள்ள கவிதைகள் பற்றிக் குறிப்பிட முடியுமா? எவ்வகையான கருப்பொருட்களை மையமாக வைத்து உங்களது கவிதைகளை எழுதுகின்றீர்கள்?

நான் நியூஸிலாந்துக்குப் புலம் பெயர்ந்து வந்தபின் கொஞ்ச நாட்கள் எழுத்துலகில் இருந்து ஒதுங்கி இருந்தேன். ஒரு விபத்தில் சிக்குண்டு அப்போது நான் சக்கர நாட்காலியில் இருந்தேன். நண்பர்கள் ஒதுங்கிக் கொண்டார்கள். என்னைத் தெரிந்தவர்கள் நான் யாரென்று கேட்டார்கள். அப்போது கோபத்திலும் விரக்தியிலும் பல கவிதைகள் எழுதிக் கிழித்துப் போட்டேன். என் உடல் நிலை தேறிய பின்புகூட எழுத்துத் துறையில் நான் ஈடுபடவில்லை. ஆனால், முகநூல் கணக்குத் திறந்த பிறகு, எழுதச்  சொல்லி என் பேனா அடம் பிடித்தது. 

முகநூல் மூலம் அவுஸ்திரேலியா வானொலி முஸ்லிம் சேவைத் தயாரிப்பாளர் முஹம்மது முஹுசீன் அவர்களின் தொடர்பு ஏற்பட்டது. வானொலி நிகழ்ச்சிகளுக்காக அவர் என்னைத் எழுதத் தூண்டினார். என் இலக்கியப் பயணத்தில் ஏற்பட்ட இடைவெளியை அப்போது நிரப்ப ஆசைப்பட்டேன். அந்த ஆசையின் விளைவாகவே 'இரவைக் காக்கும் இமைகள்' என்ற கவிதைத் தொகுப்பு வெளியானது. இந்தத் தொகுப்பில் இருக்கும் பாதிக் கவிதைகள், ஓர் இளம் படைப்பாளியாக பத்திரிகை, சஞ்சிகைகளுக்கு நான் ஆரம்ப காலத்தில் எழுதியவை. மீதிக் கவிதைகள் வானொலியிலும் முகநூலிலும் எழுதியவை. என் கவிதைக்கான கருவும் நடைமுறை வாழ்க்கையில் கிடைப்பதுதான். காதல், வீரம், துணிவு,  ஏமாற்றம், சவால்கள்,  அடக்குமுறைக்கு எதிரான குரல், யுத்த காலச் சூழல் என்று வெவ்வேறு கருப்பொருளில் என் பேனா பேசுகிறது.


சிலரை கவிதை எழுதத் தூண்டுவதே காதல் என்று சொல்கிறார்களே. இதுபற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

என்னைக் கவிதை எழுதத் தூண்டிய காரணிகள் பல. அதில் வாசிப்பும் ஒன்று. இரண்டாவது காரணி நான் வாழ்க்கையில் அனுபவித்த வலிகள், வேதனைகளை அனுபவித்து எழுதும் கவிதைகளில் வார்த்தைகள் வசப்பட்டு விடும். பிறரின் வலிகளை உணர்ந்த தருணங்களிலும் கவிதை எழுதுவேன். அதற்காக நான் காதல் கவிதைகள் எழுதவில்லை என்று சொல்ல வரவில்லை. இளமையில் காதலைப்  பாடினேன். அது ஒரு குறுகிய பார்வையில் தெரிந்த காதல் - ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும்  இடையிலான காதல் அது. இப்போது காதல் என்ற சொல் வானத்தைப் போல விரிந்து தெரிகிறது. தந்தையை, தாயை, இயற்கையை, இலட்சியங்களை.. என்று எல்லாவற்றையும் நான் காதலிக்கிறேன். அந்த உணர்வுகளைக் கவிதையில் வடிக்கிறேன். அன்று எழுதிய காதல் கவிதைகளுக்கும் இன்று எழுதும் காதல் கவிதைகளுக்கும் வித்தியாசம் இதுதான்.


கடைசியாக வெளியிட்ட உங்களது என் சிறகில் சிக்கிய வானம் என்ற பயணக் கட்டுரைகளடங்கிய நூலின் தலைப்பு, உள்ளடக்கம் பற்றி என்ன கூறப் போகின்றீர்கள்?

இது என் பயணக் கட்டுரைகளின் தொகுப்பு. 2019 டிசம்பர் 14 முதல் நியூசிலாந்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு 2022 ஜனவரி 24 வரை 40 நாட்களாக ஆறு நாடுகளில் பயணித்த அனுபவங்களை இந்த நூலில் கட்டுரைகளாகப் பகிர்ந்திருக்கிறேன். கட்டுரைகளுக்குப் பொருத்தமான படங்களையும் புத்தகத்தில் இணைத்திருக்கிறேன்.  

நான் பயணங்களை முடித்து விட்டு நாடு
திரும்பியபோது, கொரோனாத் தொற்று தலைகாட்ட ஆரம்பித்திருந்தது. சில வாரங்களுக்குள் நாடு முடக்கப்பட்டு வீட்டுக்குள் அடைபட்டிருந்த நிலையில், எனது பயண அனுபவங்களை முகநூலில் தொடராக எழுதி வந்தேன். இந்தக் கட்டுரைகள் வாசகர்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்றன என்பதற்கு அவர்களின்  பின்னூட்டங்கள் சாட்சியாயின. இந்தக் கட்டுரைகள் நூலுருப் பெறவேண்டும் என்று பலரும் கேட்டுக்கொண்டனர். அவர்களின் ஊக்கம் காரணமாகவே இந்த நூலை வெளியிட வேண்டும் என்ற எண்ணம் எனக்குத் தோன்றியது.


இத்தனை நூல்களையும் வெளியிடுவது எப்படி சாத்தியமானது? 

இத்தனை நூல்கள் என்று பெருமைப்படும் அளவுக்கு என்னிடம் நீண்ட பட்டியல் ஒன்றுமில்லை. மொத்தம் நான்கு நூல்கள்தான். முதல் இரண்டு நூல்களையும் வெளியிடும் போது ஒரு மாணவியாக இருந்தேன். 

என் புத்தகத்தை சிலர் வெளியிட வேண்டும் என்று வலிந்து வந்து கேட்கிறார்கள் என்று அப்போது எனக்குப் பெருமையாக இருந்தது. ஒரு பாரிய கடன் சுமை என் தோளில் ஏறப்போகிறது என்பதை உணராத அப்பாவியாக எல்லாவற்றுக்கும் தலை ஆட்டினேன். அந்த அனுபவம் தந்த பாடம்தான் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக புத்தக வெளியீடு பற்றிய சிந்தனையை என்னிலிருந்து தூக்கியெறிந்துவிட்டது. ஆனால், பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் அவ்வப்போது வெளிவந்த எனது கவிதைகள், சேர்த்து வைத்திருந்த  பத்திரிகை நறுக்குகள் எல்லாம் காலத்தால் அழிந்து போவதை நினைக்க மிகவும் கவலையாக இருந்தது. எஞ்சியிருந்த சில பத்திரிகைத் துண்டுகளை சேர்த்தெடுத்து இன்னும் கொஞ்சம்  முகநூல் கவிதைகளையும் சேர்த்து 'இரவைக் காக்கும் இமைகள்' என்ற எனது கவிதை நூலை வெளியிட்டேன். அப்போது, கொரோனாத் தொற்றில், பயணிக்க முடியாத நிலை, கூட்டங்கள் கூட முடியாத நிலையில் வெளியீட்டு விழா கூட இணைய வசதியுடன் ஸூம் (ZOOM) மூலமே நடைபெற்றது.


தற்போது நீங்கள் வெளி நாட்டில் வசித்து வருகின்றீர்கள். அங்கிருந்து கொண்டு உள் நாட்டில் நூல்களை வெளியிடுவது சிரமமாகத் தோன்றவில்லையா?

அது மிகவும் சிரமமான காரியம் என்பதால்த்தான் நூல் வெளியீட்டில் நான் அக்கறை காட்டாமல் இருந்தேன். வெளிநாட்டில் இருப்பதால் நியாயமான விலைக்கு புத்தகம் அடிப்பதுகூட கஷ்டமாக இருக்கிறது. 


ஏனைய எழுத்தாளர்களோடு உங்களுக்கு எவ்வகையான இலக்கிய நட்பு இருக்கிறது?

வெளிநாட்டில் வசிப்பதால் உள்நாட்டு எழுத்தாளர்களுடனான தொடர்பை முகநூல் வழியாக மட்டுமே பேண முடிகிறது. அதைத்தவிர, ஆற்றலுள்ள முஸ்லிம்  பெண்களின் அமைப்பான 'ஸ்ரீ லங்கா பென் கிளப்' அமைப்பின் போஷகராக இணைந்திருக்கிறேன். அதன் மூலம் பல எழுத்தாளர்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது.


கவிதை, சிறுகதைத் துறை தவிர வேறு எந்தெந்தத் துறைகளில் உங்களுக்கு ஆர்வம் அதிகம்? அத்துறை பற்றியும் குறிப்பிடலாமே?

நாடகத் துறையில் எனக்கு அதிக ஈடுபாடு இருக்கிறது. இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பான நாடகங்களே, மக்கள் மத்தியில் என்னை அறிமுகப்படுத்தியது என்றுகூடச் சொல்லலாம். 

அண்மைக் காலமாக மொழிபெயர்ப்புத் துறையிலும் ஈடுபட்டு வருகிறேன். 'ஸ்ரீ லங்கா பென் கிளப்' அமைப்பின் மொழிபெயர்ப்பு நிகழ்ச்சிக்காக மாதம் ஒரு கவிதையை மொழிபெயர்த்து வருகிறேன். இதற்காக, 'பென் கிளப்' அமைப்பின் உறுப்பினர்களின் சிறந்த கவிதைகளைத்  தெரிவு செய்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வருகிறேன். 

பத்தி எழுத்திலும் எனக்கு ஆர்வம் அதிகம். ஆங்கிலத்தில் நிறைய ஆய்வுக் கட்டுரைகள் எழுதி உள்ளேன். ஒரு நாவலும் தயாராகி வருகிறது. மேடைப் பேச்சுக்களில் கலந்து கொள்வதும் எனக்குப் பிடிக்கும். தொடர்ச்சியாக வாய்ப்புக்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. உலக சமாதான தினம், சர்வதேச மனித உரிமைகள் தினம், இன மத நல்லிணக்கக் கூட்டங்கள் போன்ற பல நிகழ்வுகளில் விசேட பேச்சாளராக கலந்து கொண்டுள்ளேன். பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியிலும் உரையாற்றி இருக்கிறேன். 


நாடகத் துறையில் நீங்கள் ஆற்றிய பங்களிப்புகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் நான் நிறைய நாடகங்கள் எழுதி உள்ளேன். அதில் பாறையில் பூத்த மலர் என்ற தொடர் நாடகமும் அடங்கும். அதன் பின்பு அவுஸ்திரேலியா வானொலியின் 'வளர்பிறை' முஸ்லிம் நிகழ்ச்சிக்காக நாடகங்களை எழுதி, நானே பல குரல்களில் நடித்தும் இருக்கிறேன். உரைச்சித்திரம் நிகழ்ச்சிகளிளும் நானே எழுதி நடித்திருக்கின்றேன்.


வானொலிக்கு ஆக்கங்களை எழுதிய காலத்தில் உங்களுக்குக் கிடைத்த அனுபவங்கள் பற்றிச் சொல்லுங்கள்?

சமூக வலைத்தளங்கள் இல்லாத அந்தக் காலகட்டத்தில், வானொலி நேயர்கள் தங்கள் கருத்துக்களையும், பாராட்டுக்களையும் கடிதங்கள் மூலமாவே பகிர்ந்து வந்தார்கள்.  வானொலியில் நாடகங்கள் ஒலிபரப்பாகினால், தொடர்ந்தும் இரண்டு, மூன்று வாரங்களுக்குக் கடிதங்கள்  வந்து கொண்டே இருக்கும். எங்கள் உறவினர்களின் வீடுகளுக்குச் சென்றாலும் நாடகங்கள் பற்றிய பேச்சு கட்டாயமாக இருக்கும். 

என் தந்தையின் நட்பு வட்டத்தில் இருப்பவர்கள் அவரைக் காணும் போதெல்லாம் உங்கள் மகளின் நாடகத்தைக் கேட்டு மகிழ்ந்தோம் என்று நாடகம் பற்றி கருத்துப் பரிமாறுவார்களாம். வாப்பா வீட்டுக்கு வந்து அந்தக் கருத்துக்களை என்னிடம் எத்திவைத்து விட்டு, என்னைப் பக்கத்தில் உட்கார வைத்து 'உங்கள் எழுத்துக்கள் நிறைய மக்களைச் சென்றடைகிறது. அதனால் எப்போதும் சமூகத்துக்கு பயனுள்ள விடயங்களையே எழுதுங்கள்' என்று சொல்வார். நாடகத்தைக் கேட்கத் தவறியவர்கள் நான் ஒலிப்பதிவு செய்து வைத்த, ஒலிப்பதிவு நாடாவைக் கேட்டு வருவார்கள். அது கை மாறி மாறி எங்கெல்லாமோ போகும். ஆனால் அபூர்வமாகவே திரும்பி வரும்.

நேயர்களிடமிருந்து வந்த கடிதங்களை எல்லாவற்றையும் மிகவும் ஆசையுடன் பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். ஆனால், கறையானுக்குப் பொறுக்கவில்லை. என் நாடோடி வாழ்க்கையும் அதற்குக் கைகொடுக்கவில்லை. இப்போது அந்த இனிய நினைவுகள் மட்டுமே என்னிடம் மீதமிருக்கின்றன.


சிறுவர் படைப்புகளை வெளியீடு செய்வதில் உங்களுக்கு நாட்டம் இல்லையா?

சிறுவர்களுக்காக வானொலியில் உரைச் சித்திரங்கள் எழுதி உள்ளேன். சிறுவர்களின் உள நல மேம்பாட்டுக்கான நிகழ்ச்சிகளை நேரில் நடாத்தி வருகிறேன். சிறுவர் படைப்புக்களில் நாட்டமில்லை என்று சொல்வதற்கில்லை. அதற்கான நேரமில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.


உங்களது இலக்கியப் பங்களிப்புகளுக்காக இதுவரை நீங்கள் பெற்ற பாராட்டுக்கள், பட்டங்கள், கௌரவங்கள், விருதுகள் பற்றிக் கூறுங்கள்?

விருதுகள் விற்கப்படும் ஒரு கால கட்டத்தில் வாழ்ந்து வருகிறோம். பட்டங்கள் மலிந்து அதன் உண்மையான பெறுமதியை இழந்துவிட்டன. பணம் தந்தால் பாராட்டு விழா நடத்துவோம் என்று நிறைய இயக்கங்கள் கிளம்பி இருக்கின்றன. இவற்றை விட்டும் தூரப்பட்டு இருப்பதில் மகிழ்ச்சி.

நான் முகநூலை என் எழுத்துக்களுக்கு சிறந்ததோர் களமாகப் பயன்படுத்தி வருகிறேன். என் எழுத்துக்கள் பரந்துபட்ட வாசகர்களைச் சென்றடைய முகநூல் உதவுகிறது. வாசகர்களின் நேர்மையான பின்னூட்டங்களை மிகவும் மதிக்கிறேன். அவைகள் தாம் என் எழுத்துக்குக் கிடைக்கும் மிகச் சிறந்த கௌரவங்கள். 

இதுதவிர, விரைவில் ஒரு சர்வதேச நிகழ்வொன்றில் நேர்மையான முறையில் கௌரவிக்கப் படவுள்ளேன் என்று மட்டும் இப்போது சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.


வேறு ஏதாவது சொல்ல விரும்பினால்...?

நான் சிறுமியாக இருக்கும்போது எனக்குக் களம் தந்து கை கொடுத்தது தினகரன் பத்திரிகைதான். நான் புலம்பெயர்ந்த பின்பும், என் நேர்காணல்கள் பலமுறை தினகரனில் வெளியாகி இருக்கின்றன. தினகரன் ஆசிரியருக்கும், என்னை நேர்காணல் செய்த சகோதரி ரிம்ஸா முஹம்மத் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


Sunday, May 14, 2023

56. டாக்டர் ஜலீலா முஸம்மில் அவர்களுடனான நேர்காணல்

எழுத்தாளர், கவிஞர், நூலாசிரியை

Dr. ஜலீலா முஸம்மில் (MBBS / SL)

ஏறாவூர்.


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

டாக்டர் ஜலீலா முஸம்மில் அவர்களுடனான நேர்காணல்


உங்களைப் பற்றிய அறிமுகத்தை எமது வாசகர்களுக்காகக் கூறுங்கள்?

அருளாளன் அன்பாளன் எல்லாம் வல்ல இறையோன் எமை ஆளும் நல்லோன் வல்லோன் அல்லாஹுத்தஆலாவை முதற்கண் பணிந்தவளாக, அடுத்து தினகரன் செந்தூரம் இதழ் குழுவினருக்கும் மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்தவளாக, நான் ஜலீலா முஸம்மில். இலங்கை நாட்டின் மீன்பாடும் தேனாடாம் மட்டக்களப்பு மாவட்டம், ஏறாவூரைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட நான் மர்ஹும் யூ.எச். முகம்மது (முன்னாள் அதிபர் மட்ஃஅலிகார் தேசிய பாடசாலை, ஏறாவூர்) சித்தி பௌசியா தம்பதியின் மூன்றாவது பிள்ளை. தற்போது ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் வைத்திய அதிகாரியாக பணிபுரிகிறேன்.


உங்கள் பாடசாலை வாழ்க்கை, பல்கலைக்கழக வாழ்வு, இலக்கிய ஈடுபாடு பற்றிக் குறிப்பிடுங்கள்?

ஆரம்பக் கல்வியை ஏறாவூர் அறபா வித்தியாலயம் மற்றும் அல் முனீரா வித்தியாலயத்திலும் உயர் தரக் கல்வியை கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியிலும் பயின்றேன். மருத்துவக் கல்வியை கொழும்பு களனிப் பல்கலைக்கழகத்தின் றாகமை மருத்துவ பீடத்தில் கற்று முடித்தேன். தேசிய இரத்தப் பரிமாற்ற சேவையில் ஐந்து வருடங்கள் சேவை அனுபவம் உண்டு.

சிறு பராயம் முதலே வாசிப்பிலே எனக்கு ஆர்வம் அதிகம். எப்போதும் வாசிப்பு, எதிலும் வாசிப்பு என்று தணியாத தாகமாய் தமிழிலே எனக்கு அப்படியொரு பற்று. வாசிப்போடு உறவு கொண்டிருந்ததாலேயே தமிழிலே விருப்பு வந்தது என்றால் அது மிகையாகாது. எனது தந்தை ஹயாத்து முஹம்மது அவர்கள் கணித ஆசிரியராக இருந்த போதிலும் தமிழ் மொழியிலும் தேர்ச்சி பெற்றவராக இருந்தார். அத்துடன் மரபுக் கவிதை புதுக்கவிதை போன்றவற்றை இயற்றக் கூடியவர்களாகவும் இருந்தார். செய்யுள்களையும் காவியங்களையும் கதைகளையும் தமிழ் ஊற, தமிழ் சொட்டச் சொல்லித் தருவதில் மிகவும் கெட்டிக்காரராக இருந்தார். எனவே எனது தமிழின் ஆஸ்தான குரு தந்தை என்று தெரிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.


எதை எழுதினாலும் அவரிடமே முதலில் அதைச் சமர்ப்பித்து, பாராட்டுக்கள் வாங்குவது எனது வழக்கமாய் இருந்தது. தமிழ்ப் பாடத்தைச் சுவைபடக் கற்பித்த தமிழ் ஆசான்களும் எனது தமிழ் வளரக் காரணமானவர்கள்தாம். இவ்விடத்தில் அவர்களை நினைவுகூரக் கடமைப்பட்டுள்ளேன். 

கல்வியிலே திறமையைக் காட்டினாலும் எழுத்துலகம் எனது இன்னொரு கண்ணாகவே இருந்தது. எழுத்தும் வாசிப்பும் நான் மிகவும் நேசிக்கும் துறைகளாகும். கற்றலின் ஊடே கவிதை எழுதுவதையும் வாசிப்பதையும் விடாமல் தொடர்ந்தேன். அந்தக் காலங்களில் எனது தமிழ்ப் பசிக்கு பல்வேறுபட்ட நூல்களை வாசிப்பது தீனியாக அமைந்தது. இப்போதும் அதைத் தொடர்ந்த வண்ணம் இருக்கிறேன். பள்ளிப் பருவத்திலே கவிதைப் போட்டி, பேச்சுப் போட்டி, பாடல் போட்டி, பட்டிமன்றம், குறுக்கெழுத்துப் போட்டி போன்றவற்றைத் தயார் செய்வது மட்டும் அல்லாமல் அந்தப் போட்டிகளிலும் நான் பங்கு பற்றினேன். அதுமட்டுமல்லாது பாடசாலைக் கலை நிகழ்ச்சிகளில் அறிவிப்பாளராகவும் பங்கேற்றுள்ளேன். பாடசாலைகளில் வெளியிடப்பட்ட நூல்களிலும் எனது பங்களிப்பை வழங்கியுள்ளேன். இவ்வாறு தமிழோடு இழைந்து இணைந்து பயணித்தது எனது இலக்கியத் தாகத்திற்கு வித்திட்டது எனலாம். சொல்லோடிணைந்த பொருளாய் என்னோடு தமிழ் ஒட்டிக்கொண்டுவிட்டது என்று கூறுவதில் பெருமைப்படுகிறேன். சிறுவயதில் ஆரம்பித்த எனது இலக்கிய மோகம் காலம் செல்லச் செல்ல வளர்ந்து கொண்டே இருந்தது. தொழில் வேறு துறையில் என்றாலும் அடிமனதில் ஆழப் பதிந்துவிட்ட தமிழை ஆராதிக்கும் வண்ணத்தில் சிறிது எழுத ஆரம்பித்துள்ளேன்.


முதன் முதலாக எழுத்துத் துறைக்குள் வந்த அநுபவம் பற்றிப் பகிர்ந்துகொள்ளுங்கள்?

நீண்ட காலமாக எழுத்துத் துறைக்குள் வர வேண்டும் என்ற ஆசை மனதிலே இருந்து வந்தது. சிறுவயதிலே பள்ளிக் காலங்களில் பத்திரிகைகளுக்கு கட்டுரைகள், கவிதைகள், கதைகள் போன்றவற்றை எழுதி அனுப்புவேன். அவை வெளிவந்தனவா இல்லையா என்று எனக்கு தெரியவில்லை. அந்தக் கனவு, அந்த ஆசை இவ்வளவு நாள்பட்டதன் பிறகு நிறைவேறி இருக்கிறது. பள்ளிக் காலம் தொட்டு எழுதத் தொடங்கி இருந்தாலும் அவை எனக்குள்ளே புதைந்துவிட்டன என்றும் சொல்லலாம். அப்போதுகளில் அதற்கான களமும் காலமும் அமையவில்லை என்றே நினைக்கிறேன். சிலவற்றைச் சேமித்து வைத்துள்ளேன். சில படைப்புகள் காலப்போக்கில் காணாமலே போய்விட்டன. நண்பி ஒருவர் மூலம் எழுத்துத் துறைக்குள் வருவதற்கான ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அதன் மூலம் புலனக் குழுமங்களில் எனது கவிதைகளைப் பதிவேற்றம் செய்து வந்தேன். அதன் பிறகு படிப்படியாக முகநூல் குழுமங்களில் நடக்கும் கவிதைப் போட்டிகளில் பங்குபற்றினேன். பத்திரிகைகளுக்கும் எனது ஆக்கங்களை எழுதத் தொடங்கினேன். இவ்வாறே எழுத்துத் துறைக்குள் எனது பயணம் சென்று கொண்டிருக்கிறது.


முதன் முதலாகக் கவிதை எழுதிய தருணம் எது?

முதன் முதலாக கவிதை எழுதிய தருணம் என்றால் 1995 இல் அதாவது தரம் நான் ஒன்பதில் கற்கும் போது எனது நண்பிக்காக நட்பு பாராட்டி எழுதியது என்று நினைக்கிறேன். அது மனதை வருடிய ஒரு சுகமான தென்றலாக என் நினைவில் இப்போதும் நிறைந்திருக்கிறது.


உங்களது முதலாவது ஆக்கம் எப்போது, எந்த ஊடகத்தில் வெளிவந்தது?

முதன் முதலாக எனது ஆக்கமான ஷஷநான் எழுதுகிறேன்' எனும் தலைப்பிலான கவிதையானது பிரான்சு நாட்டில் இருந்து வெளியாகும் தமிழ் நெஞ்சம் மின்னிதழில் 2021 அக்டோபர் முதலாம் திகதி வெளிவந்தது. அது எனது வாழ்வில் மகிழ்ச்சிகரமானதும் நெகிழ்ச்சியானதுமான ஒரு சம்பவமாக இருக்கிறது. அந்தத் தருணத்தில் மனதில் ஏற்பட்ட உவகைப் பட்டாம்பூச்சிகளை சொல்லில் வடிக்க முடியாது. என வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு மகிழ்ச்சியான தருணமாக அது இருக்கிறது.


இதுவரை எத்தனை நூல்களை வெளியிட்டுள்ளீர்கள்? அந்த நூல் பற்றிக் குறிப்பிடுங்கள்?

கவிதைத் தொகுப்பு நூல்கள் பலவற்றில் எனது கவிதைகள் இடம்பிடித்துள்ளன. இந்தியாவிலும் இலங்கையிலும் சுமார் பத்துக்கும் மேற்பட்ட தொகுப்பு நூல்களில் எனது கவிதைகள் வெளியாகியுள்ளன. எனது தனிப்பட்ட படைப்பான ஷஷசிறகு முளைத்த மீன்' எனும் கவிதை நூலைக் கடந்த 2022 ஆம் வருடம் வெளியீடு செய்தமையிட்டு பெருமிதமும் பேருவகையும் அடைகிறேன். இக்கவிதைத் தொகுதி கடந்த 2022.02.27 ஞாயிற்றுக் கிழமை மாலை 5.00 மணிக்கு சென்னைப் புத்தகக் கண்காட்சியில் (YMCA, NANDANAM) எழிலினிப் பதிப்பகத்தால் வெளியீடு செய்து வைக்கப்பட்டது. கன்னி வெளியீடான இந்நூலினை தமிழ் நாடு அரசு மாநில திட்டக் குழு உறுப்பினர், தமிழிசை நடனக் கலைஞர், முனைவர் பத்மசிறீ கலைமாமணி நர்த்தகி நடராஜ் வெளியிட்டு வைத்ததுடன் நூலின் முதற் பிரதியை முனைவர் கவிஞர் கூடல் தாரிக் அவர்கள் பெற்றுக்கொண்டார். அத்துடன் பேராசிரியரும் பிரபல பேச்சாளருமான முனைவர் பர்வீன் சுல்தானா அவர்களும் விழாவினை அலங்கரித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இக்கவிதை நூல் வெளியீடு இலங்கையிலும் கடந்த 2022.10.01 அன்று சனிக் கிழமை ஏறாவூர் வாவிக்கரை வீதியில் அமைந்துள்ள கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது. 

எனது இரண்டாவது நூல் தொகுக்கும் பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. ஹைக்கூ கவிதை நூலாக அது வெளிவரப் போகிறது. இன்ஷா அல்லாஹ் ஓரிரு மாதங்களில் வாசகர்களான உங்களின் கைகளில் தவழும் என்பதை மகிழ்வுடன் இவ்விடத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.


உங்களுடைய முதல் பிரசவமான சிறகு முளைத்த மீன் என்ற கவிதைத் தொகுதியின் தலைப்பு குறித்துக் கூறுங்கள்?

கவிதை நூலுக்குள் இருக்கும் ஒரு நேச வெளிப்பாடாகும் கவிதை ஒன்றின் தலைப்பே நூலின் தலைப்பாகவும் அமைந்துவிட்டது. ஆழ்கடலில் அமிழ்ந்திருந்த மீன் ஒன்று கவிதைச்சிறகு முளைத்து வான் வெளியில் எம்பி உற்சாகத்தோடு, உத்வேகத்தோடு பறக்கத் தயாராகி விட்டதையும் அது குறிப்பிடுவதாக அமைகிறது. ஆழ்கடலுக்குள் யாருமே அறியாதிருந்த அந்த மீன் வான்வெளியெனும் இலக்கிய உலகில் காலடி எடுத்து வைக்க வந்திருக்கிறது என்றும் எடுத்துக் கொள்ளலாம்.


உங்கள் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ள கருப்பொருட்கள் யாவை? இவற்றினூடாக நீங்கள் சொல்ல முனையும் விடயங்கள் என்ன?

சிறகு முளைத்த மீன் பல்சுவை அம்சங்களோடு பல்வேறுபட்ட கவிப் பூக்களின் கதம்பமாக வெளிவந்து இருக்கிறது. அதிலே ஒரு வரிசைக் கிரமத்தை நீங்கள் அவதானிக்கலாம். இறைவன், நபிகளார், தந்தை, தாய், கணவன் மனைவி, மகள், நண்பர்கள், உழவர் போன்ற தலைப்பில் அமையக்கூடிய கவிதைகள் ஒவ்வொன்றாக இடம் பெறுவது இன்னூலின் சிறப்பம்சம் என்று நான் நினைக்கிறேன். அத்தோடு ஹைக்கூ கவிதைகள், தன்முனைக் கவிதைகள், நாட்டார் பாடல், கிராமியக் கவிதைகள், காதல் கவிதைகள், ஊக்கக் கவிதைகள், இயற்கை சம்பந்தமான கவிதைகள் மற்றும் மகாத்மா காந்தி, பாரதி, ஆண் தேவதை போன்ற தலைப்பிலான கவிதைகளும் உள்ளடங்கலாக ஒரு கவிதைத் தொகுதியாக இருக்கிறது. 


இறைவனின் மகத்துவத்தையும் உறவுகளின் முக்கியத்துவத்தையும் காதலின் இரசனையையும் இயற்கையின் வருடலையும் உலகில் வாழ்ந்து மறைந்த சில தலைவர்களைப் போற்றியும் புகழ்ந்தும் நேர்மறை சிந்தனைகளைத் தூண்டித் துவண்டவர்களைத் தூக்கி எழுப்பிவிடும் ஊக்கக் கவிதைகளுமென எனது கவிதை நூல் ஆக்கப்பட்டிருக்கிறது என்பதைப் புளகாங்கிதத்தோடு உங்களிடம் தெரிவிக்கிறேன்.


வாசகர்கள் மத்தியில் உங்கள் கவிதைகளுக்கான வரவேற்பு எந்தளவில் உள்ளது?

இந்தியாவில் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் எனது சிறகு முளைத்த மீன் கவிதை நூல் சென்ற வருடம் வெளியீடு செய்த பின்னர் எப்போது இலங்கையில் வெளியிடப்படப் போகிறது என்று இலங்கை நண்பர்கள் அடிக்கடி கேட்ட வண்ணம் இருந்தனர். அந்தவகையில் இலங்கையிலும் வெளியீடு செய்து அதனை நான் வாசகர்கள் கையில் தவழவிட்டிருந்தேன். அதிலிருந்து நான் எனது நூலுக்கான வரவேற்பை வாசகர்கள் எவ்வாறு வழங்கியிருந்தார்கள் என்பதை அறிந்து கொண்டேன். நிச்சயம் எனது கவிதைகள் வாசிப்பவரின் மனதில் புதுத் தெம்பையும் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் வரவழைக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். எல்லோருக்கும் பயனுள்ளதாகவும் அமையும் என்றும் நினைக்கிறேன். அந்தவகையில் எல்லாம் வல்ல இறைவனுக்கே அனைத்துப் புகழும் நன்றிகளும் உரித்தாகட்டும்.


நீங்கள் எழுதிய பல கவிதைகளில் உங்கள் மனதில் பதிந்துள்ள ஒரு கவிதையைப் பற்றிச் சொல்வீர்களா?

ஆமாம். நிச்சயமாக. நேயம் என்றொரு கவிதை என் நினைவுக்கு வருகின்றது. இயற்கையோடு ஒன்றி வாழும் உயிர்கள் எல்லாம் ஒற்றுமையாக வாழும் போது மனிதர்கள் மட்டும் வேற்றுமையையும் பிரிவினையையும் ஏற்படுத்தி வாழ்வதனைக் கோடிட்டுக் காட்டுகிறது அந்தக் கவிதை. ஆரம்ப காலத்தில் நான் எழுதிய ஒரு கவிதை அது. அக்கவிதையும் நூலாக்கத்திற்கு உட்பட்டிருப்பது மிகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. இது எனது மனதில் பதிந்த கவிதையாகவும் இருக்கிறது.


உங்களுக்குப் பிடித்த கவிஞர்கள் யாவர்? உங்கள் எழுத்துக்களில் எந்தக் கவிஞரின் தாக்கம் காணப்படுகின்றது?

எல்லாக் கவிஞர்களும் எனக்குப் பிடித்த கவிஞர்கள்தான். கவிதைகளையே நான் கூடுதலாக விரும்பி படிப்பேன். சுப்ரமணிய பாரதி, மஹாகவி, அப்துல் ரகுமான், வைரமுத்து, மு. மேத்தா, நா. முத்துக்குமார் போன்றவர்களின் கவிதைகள் எனக்குப் பிடித்தமானவை. எனது கவிதைகளில் யாருடைய தாக்கம் அதிகமாக இருக்கின்றன என்பதை வாசகர்கள் தான் எனக்குக்கூற வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.


உங்கள் கவிதைகள் மூலம் சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்று நம்புகின்றீர்களா?

நிச்சயமாக. ஆயுதங்களின் முனையைவிட பேனா முனைக்கு சக்தி அதிகம் என்று நினைக்கிறேன். ஊக்கமிக்க கவிதைகளை வாசிப்பவர்கள் அதனால் தூண்டப்பட்டுப் பயனடைவார்கள் என்று நம்புகிறேன். சிறு துளி விழுந்து பெருவெள்ளம் வருவது போல, சிறு அக்கினிக் குஞ்சொன்று ஒரு காட்டையே எரித்து விடுவது போல, சிறு கவிதையொன்று சமூக மாற்றத்தை ஏற்படுத்த வல்லது என்பதற்கான சான்றுகள் நமது வரலாற்றில் நிறையவே உண்டு. அந்தவகையில் எனது கவிதைகளும் அவ்வகையான ஒரு மாற்றத்தைத் தரும் என்று உறுதியாக நம்புகின்றேன். 


இதுவரை எத்தனை சிறுகதைகளை எழுதியுள்ளீர்கள்? உங்களுக்குள் சிறுகதைகள் எவ்வாறு உருவாகின்றது? சிறுகதைகளுக்கான உங்களது பாத்திரப் படைப்பு எப்படிப்பட்டது?

சிறுகதை எழுதியது மிகக் குறைவு. அதற்கான காரணம் நேரமின்மை என்று நினைக்கிறேன். எழுதிய சிறுகதை ஒன்று பிரதேச செயலக இலக்கிய மட்டத்தில் முதலாம் இடம் பெற்றதை இவ்விடத்தில் நான் நினைவுகூர்கிறேன். சமூகத்தில் ஒரு பெண்ணின் கஷ்டங்கள் மற்றும் அவளுடைய துயரங்களின் பிரதிபலிப்பே பெரும்பாலும் என்னுடைய சிறுகதைகளில் இடம்பெறுகின்றன. வாழ்வின் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் எம்மைத் தாக்குகின்ற, மனதில் சலனத்தை ஏற்படுத்துகின்ற ஒவ்வொரு விடயமும் சிறுகதைக்கான ஒரு கருவாகவே அமைந்து விடுகின்றது என்பது உண்மையான விடயம். எனது சிறுகதைகளும் இவ்வாறான கருக்களிலே துளிர்த்து உருவானது எனலாம்.


நீங்கள் அதிகமாக கவிதைகளையே எழுதியுள்ளீர்கள். இலக்கியத்தின் ஏனைய துறைகளில் ஈடுபாடு காட்டும் அக்கறையில்லையா?

கவிதையே எனக்கு மிகவும் விருப்பமான ஒரு துறையாக இருக்கிறது. புதுக் கவிதை எனும் போது அதற்கு எந்தவிதமான கட்டுப்பாடுகளோ நிபந்தனைகளோ இருப்பதில்லை. நினைத்த விடயத்தை நாம் வித்தியாசமாக சொல்கின்ற விதமே புதுக் கவிதைக்கான ஒரு பாணியாக இருக்கிறது. நிச்சயமாக இலக்கியத்தின் ஏனைய துறைகளிலும் ஈடுபாட்டையும் கவனத்தையும் செலுத்த வேண்டும் என்று ஆசை இருக்கிறது. ஆயினும் பணி நிமித்தமாகவும் நேரமின்மை காரணமாகவும் அதில் கூடுதலான கவனம் எடுத்துக்கொள்ள முடியாமல் உள்ளேன். இனிவரும் காலங்களில் நேரத்தை ஒதுக்கி அதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று எண்ணியிருக்கிறேன். வல்ல இறைவன் அதற்குத் துணை புரிய வேண்டும். இன்ஷா அல்லாஹ்.


உங்களது இலக்கிய வாழ்வில் மறக்க முடியாதவர்கள் யாவர்?

நான் இலக்கியத் துறையில் காலடி எடுத்து வைத்தது முதல் இன்று வரைக்கும் என்னோடு பயணித்து எனக்கு உதவி புரிந்தவர்கள் அனைவரும் எனது வாழ்வில் உண்மையிலேயே மறக்க முடியாதவர்கள்தான். அதற்கு முதற்கண் இறைவனையும் அதன் பிற்பாடு எனக்கு உபகாரம் புரிந்த அனைவரையும் நினைவு கூர்ந்து நன்றிகள் தெரிவித்துக்கொள்கிறேன்.


உங்களது படைப்புகள் பெண்களின் பிரச்சினைகளைப் பேசியிருக்கின்றதா?

ஆமாம். ஒரு இலக்கியப் பெண் தனது படைப்புகளில் நிச்சயமாக பெண்களின் பிரச்சனைகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ பேசக்கூடியவளாகவே இருப்பாள். அவளது படைப்புகள் சமூகத்தை நோக்கி எழுப்பப்பட்ட ஒரு சுட்டு விரலாகவே காணப்படும். சமூகத்தைச் சாடி அவளுக்கு எதிரான பிரச்சினைகளைப் பேசக்கூடியனவாகவே அவளது ஆக்கங்கள், படைப்புகள் பரிணமிக்கின்றன. ஆம். அந்தச் சிங்கப் பெண்களின் கர்ஜனைகள் தொடர்ந்த வண்ணமே இருக்கும்.


திருமணமான பெண்கள் எழுத்துத் துறையிலிருந்து காணாமல் போய்க் கொண்டிருக்கும் இவ்வேளையில், உங்களின் இலக்கியப் பயணத்திற்குப் பின்னணியானவர்களைக் கூற முடியுமா?

ஒவ்வொரு பெண்ணிற்கும் வாழ்க்கை எனும் நாடகத்தில் நிறைய வேடங்கள் உண்டு. மகளாக, சகோதரியாக, மனைவியாக, தாயாக இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். கல்வியிலே தேர்ந்து வேலை ஒன்றைப் பெற்றுக் கொள்வது அவளது முதல் வெற்றி என்று சொல்லலாம். திருமணம் என்ற ஒன்றில் அவள் காலடி எடுத்து வைக்கும் போது அவளின் பொறுப்புக்களும் சுமைகளும் இரண்டு மடங்காகிவிடுகின்றன என்பதே உண்மை. சிறந்த குடும்பத் தலைவி என்பவள் குடும்பத்தையும் வீட்டையும் மிகவும் சாமர்த்தியத்துடன் நிர்வகிப்பவளே. அவளது நிர்வாகம் ஒரே சீராகச் செல்ல வேண்டும். சூழ்நிலைக்கேற்ப வேகமாகவும் புத்திசாலித்தனமாகவும் ஒரே ஓட்டத்தில் செல்ல வேண்டும். 

வைத்தியத் தொழில் என்பது மிகவும் பொறுப்பு மிக்கதும் வேலைப் பளு மிக்கதுமான ஒரு தொழிலாகும். மிக அவதானத்துடனும் நோயாளர் நலனில் அக்கறை கொண்டும் செய்யக் கூடிய சமூக சேவையாக அது இருக்கிறது. ஒரு பெண் என்ற ரீதியில் வேலைக்குச் செல்லுதலும் குடும்பப் பொறுப்புகளும் இரட்டைச் சுமையாக அழுத்தினாலும் அதைத் திறம்படச் செய்வதில் நாள் மிகவும் கவனம் எடுக்கிறேன். 

இவ்விடத்தில் நேரமுகாமைத்துவம் என்பது மிக அத்தியாவசியமாகிறது. நேரத்தைச் சிக்கனப்படுத்திச் செலவழிப்பதில் பெண்களின் பங்கு மகத்தானது. அந்தவகையில் எனக்கு மிகவும் பிடித்தமான எழுத்துத் துறையில் செலவழிப்பதற்கு முயற்சிகள் எடுத்துக் கொண்டிருக்கிறேன். கரும்பு தின்னக் கூலியா வேண்டும்? தமிழ் என்பது எனக்கு ஒரு போதையாக இருக்கிறது. அதைத் தருவதிலும் சுகிப்பதிலும் ஆவலுடன் இருக்கிறேன். எனது எல்லா வகையான முயற்சிகளுக்கும் வெற்றிகளுக்கும் உறுதுணையாக இருக்கும் எனது அன்புக் கணவருக்கும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். 

முற்கூட்டியே திட்டமிட்டு பார்த்துப் பார்த்து ஒவ்வொரு வேலையும் செய்யப் பழகிக் கொண்டேன். இவ்வாறான திட்டமிடலுக்கு வழிகாட்டியாக இருந்தவர் எனது தந்தையே. இவ்விடத்தில் இதைக் குறிப்பிடுவதில் பேரானந்தம் அடைகிறேன். நேர முகாமைத்துவமே எல்லா வகையான வெற்றிக்கும் அடிப்படையாக அமைவது என்பது அனைவரும் அறிந்த உண்மையாக இருக்கிறது. எனது இலக்கியப் பயணம் திருமணத்தின் பின்னரே ஆரம்பித்தது. அதற்குப் பின்னணியாக இருக்கின்ற அன்புக் கணவர், பிள்ளைகள், குடும்ப உறவுகள், நண்பர்கள், நலன் விரும்பிகள் அனைவருக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன்.


உங்கள் இலக்கிய வாழ்வில் உங்களால் மறக்க முடியாத சம்பவம் ஒன்றைக் குறிப்பிடுங்கள்?

எனது இலக்கிய வாழ்வில் மறக்க முடியாத சம்பவம் என்றால் கடந்த ஆண்டு சென்னைப் புத்தகக் கண்காட்சியில் எனது சிறகு முளைத்த மீன் கவிதை நூல் வெளியீடு செய்து வைக்கப்பட்டதுதான். உண்மையிலேயே எனக்கு அந்த வேளையில் ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. அந்த நிகழ்வு எனது வாழ்க்கையில் ஒரு மைல் கல்லாக, மறக்க முடியாத ஒரு இன்ப அனுபவமாக இருக்கின்றது. அந்த மகிழ்ச்சியில் எனது மனம் இன்பச் சிறகுகளை கட்டிக்கொண்டு மேலெழுந்து பறந்ததென்றே சொல்லலாம். 

ஒரு படைப்பாளிக்கு சந்தோசம் என்பது என்ன? அவனுடைய ஆக்கங்கள் பத்திரிகைகளில் வெளிவரும்போது அல்லது ஒரு நூலாக உயிர் பெறும்போது அவன் அடையும் ஆனந்தத்திற்கு அளவே இல்லாது இருக்கிறது. அவன் அவ்வாறான சந்தர்ப்பங்களில் இன்னும் இன்னும் நிறையக் கவிதைகளாய்ப் பூத்துக் கொண்டிருக்கிறான். படைப்புகளின் நந்தவனமாக மாறிக் கொண்டிருக்கிறான் என்பது நிதர்சனம்.


எதிர்கால எழுத்து முயற்சிகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

எனது இரண்டாவது படைப்பான ஹைக்கூ கவிதை நூலென்று மிக விரைவில் வெளிவர இருக்கிறது. இன்னும் எதிர்காலத்தில் தன்முனைக் கவிதை நூல் ஒன்றை உருவாக்குவதற்கு எண்ணி உள்ளேன். மேலும் பத்திரிகைகளில் சஞ்சிகைகளில் வெளிவந்த ஊக்கப் பதிவுக் கட்டுரைகள் மற்றும் மருத்துவக் கட்டுரைகள் அனைத்தையும் தனித்தனியாக தொகுத்து இரு நூற்களாக வெளியிடும் எண்ணமும் இருக்கிறது. சிறுகதைத் தொகுப்பு ஒன்றும் நிச்சயம் வெளியிட ஆசை. இன்ஷா அல்லாஹ் இறைவனின் அருளால் இவை அனைத்தும் ஈடேற வேண்டும் என்று அவனைப் பிரார்த்திக்கிறேன். அதற்குரிய எல்லா வகையான உதவிகளும்  கிடைக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.


உங்களுக்கு அல்லது உங்களது படைப்புக்களுக்கு இதுவரை கிடைத்த விருதுகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

1) 2021.03.26 கவித்தேன் விருது - தேனீ கலை இலக்கிய மன்றம் (இலங்கை) 

2) 2021.12.18 இலக்கியச் சேவைக்கான விருது - சிறீலங்கா பென் கிளப் - முதலாம் மாநாடு 

3) 2022.01.23 கவிச்சூரியன் விருது - தமிழ்நாடு கோவை ஊலளழ இலக்கியக் குழுமம் 

4) 2022.03.17 கவிச்சாரல் விருது - தமிழ்ச் சாரல் கலை இலக்கிய மன்றம் (இலங்கை) 

5) 2022.05.29 தமிழ் வேள் விருது - தமிழ்நாடு மதுரமொழிக் கவிச் சங்கம் 

6) 2022.07.15 செம்மொழிக் கவிமாமணி விருது - திண்டுக்கல் மாவட்ட பசுமை வாசல் பவுண்டேஷன், குமரி மாவட்ட தமிழ்நாடு பனைமரம் காக்கும் பாதுகாப்பு இயக்கம், கன்னியாகுமரி மாவட்ட காமராஜர் இளைஞர் வளர்ச்சி பேரவை, சேலம் மாவட்ட ஆத்தூர் ஸ்ரீ சக்ஸஸ் அகடமி என்ட் பவுண்டேஷன்  

7) 2022.10.01 கவி முகில் விருது - தமிழ்ச் சாரல் கலை இலக்கிய மன்றம் (இலங்கை)  

8) 2022.11.29 கலைத்தாரகை விருது - ஏறாவூர் நகர பிரதேச செயலக பிரதேசக் கலை இலக்கிய விழா 

9) 2022.12.24 அவிழ்தம் மருத்துவ சஞ்சிகை நிகழ்ச்சிக்கான விருது மற்றும் இலக்கியச் சேவைக்கான விருது - சிறீலங்கா பென் கிளப் இரண்டாவது மாநாடு 

10) 2023.01.21 ழகரச் சிற்பி விருது - தமிழ்நாடு கோவை ஊலளழ இலக்கியக் குழுமம் 

இவைதவிர பல புத்தகப் பரிசுகள், பணப் பரிசுகள், பாராட்டுச் சான்றிதழ்கள் என்று இலக்கியப் போட்டிகளில் பங்குபற்றி வெற்றி பெற்றமைக்காகக் கிடைத்துள்ளன என்பதையும் இங்கு பதிவு செய்ய விரும்புகின்றேன்.


புதிய படைப்பாளிகளுக்கு நீங்கள் முன்வைக்க விரும்பும் ஆலோசனை என்ன?

புதிய படைப்பாளிகளுக்கு நான் வழங்கும் ஆலோசனையானது நன்றாக வாசிப்பதுதான். உங்கள் வாசிப்புத் திறனை வளர்த்துக் கொள்ளும் போது உங்கள் மொழித் திறன் ஆளுமை அடைகிறது, வீரியமடைகிறது. ஆகவே நன்றாக வாசியுங்கள். கண்டது கற்கப் பண்டிதன் ஆவான் என்ற வழிமுறையைக் கடைப்பிடியுங்கள். உங்கள் எழுத்து இன்னும் வளம் பெறும். மனதில் தோன்றும் எண்ணக் கருக்களை அப்படியே எங்கேயாவது எழுதி வைத்துக் கொள்ளுங்கள். காலத்தின் போக்கினில் அதனை மெருகேற்றிக் கொள்ளுங்கள். நிச்சயம் நீங்களும் நல்லதோர் படைப்பாளுமையாக மாறலாம்.

நீங்கள் செய்கின்ற ஒவ்வொரு விடயத்தையும் இறைவனின் திருப்பொருத்தத்திற்கு அமைவாக செய்யும்போது நிச்சயம் வெற்றி காணலாம். தொடர்முயற்சி ஒருபோதும் வீண் போவதில்லை. அது விஸ்வரூப வெற்றியை உங்கள் முன் கொண்டு வரும்.

"நான் இன்று எதையெல்லாம் என்னுடைய ஒரே இதயத்தால் சொல்கின்றேனோ அது நாளை ஆயிரக்கணக்கான மக்களின் இதயத்தால் சொல்லப்படும்" என்ற கலில் ஜிப்ரானின் கூற்றை இங்கு கூற விளைகிறேன்.


இந்த நேர்காணல் மூலமாக விசேடமாக ஏதாவது கூற விரும்புகின்றீர்களா?

இந்த நேர்காணல் வாய்ப்பினை வழங்கிய தினகரன் செந்தூரம் இதழ் குழுவினருக்கும் என்னை நேர்காணல் செய்த சகோதரி ரிம்ஸா முஹம்மத் அவர்களுக்கும் விசேட நன்றிகள் தெரிவித்தவளாக,


"தமிழ்

தமிழ் மொழியாய்

தமிழ்த் தாயாய் 

தமிழ் நாடாய்

நாட்டு மக்களாய்

மக்களின் வாழ்வாய்

வாழ்வின் மலர்ச்சியாய்


வழிந்து ஓட வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செய்தல் வேண்டும்" என்ற கா. அப்பாத்துரையின் தமிழ் வாழ்த்தோடு விடைபெறுகிறேன். மகிழ்வுடனான நன்றிகள். 


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்